Skip to main content

கரோனா நிதிக்காக தேநீர் மொய் விருந்து நடத்தும் தேநீர் கடை இளைஞர்..!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Tea shop youth hosting a tea party for Corona Fund

 

‘மொய் விருந்து’... இந்த வார்த்தையைக் கேட்டாலே இது புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மக்களின் பிரத்யேக வார்த்தையாக தெரியும். ஆம்.. தஞ்சை மாவட்டம் பேராவூரணிப் பகுதியில் 1980 காலக்கட்டத்தில் தொடங்கிய மொய் விருந்து, பிறகு படிப்படியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல் என சுற்றியுள்ள 100 கிராமங்களில் கலாச்சார விருந்தாக நடத்தப்பட்டு வருகிறது. 

 

இந்த மொய் விருந்துகளால் குழந்தைகளைப் படிக்க வைத்த குடும்பங்களும், விவசாயம், தொழிலை விரிவுபடுத்திய குடும்பங்களும் ஏராளம் என்றாலும் வீழ்ந்த குடும்பங்களும் உண்டு. இந்நிலையில், கஜா புயல் தொடங்கி கரோனா வரை கடந்த 3 வருடங்களாக இந்த மொய் விருந்து விழாக்களும் பொய்த்துக்கொண்டிருக்கிறது. கஜா புயல் டெல்டா மக்களைப் புரட்டிப் போட்டபோது, அமெரிக்கா வாழ் தமிழர்கள் மொய் விருந்து நடத்தி நிதி திரட்டி தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்கள். 

 

பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கவும் மொய் விருந்து நடத்தினார்கள். இதுபோன்ற நல்ல விஷயத்திற்காக, ஒருவர் கறி விருந்து கொடுக்காமல், தனது கடையில் தேனீர் கொடுத்து மொய் விருந்து நடத்த அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருக்கிறார். அந்த அழைப்பிதழில், “டெல்லி போன்ற பகுதிகளில் கரோனா பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ 5.5.2021 அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் மொய் விருந்தில் கலந்துகொண்டு, நான் கொடுக்கும் தேனீரை அருந்தி தாராளமாக மொய் செய்ய வேண்டுகிறேன். இப்படிக்கு பகவான் டீக்கடை வம்பன்.”

 

இந்த அழைப்பிதழை தனது வாடிக்கையாளர்களுக்கு நேரிலும் சமூக வலைதளங்கள் மூலமும் கொடுத்துவிட்டு மொய் வாங்க தயாராக இருக்கிறார் தேநீர்க் கடை இளைஞர் சிவக்குமார். இதே இளைஞர், கஜா புயலில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தபோது தனது கடை வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு நேரத்தில் காய்கறி, அரிசி என நலிவுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கினார். தற்போது மொய் விருந்து நடத்த அழைத்திருக்கிறார்.

 

இதுகுறித்து பகவான் டீக்கடை சிவக்குமார் நம்மிடம் பேசும்போது, “கஜா புயல், கரோனா என கடந்த 3 வருடமாக மக்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல டெல்லி போன்ற வடமாநிலங்களில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறேன். ஆனால் எனக்கு வசதி இல்லை. ஒவ்வொரு நாளும் டீக்கடையில் கிடைக்கும் ரூ.300, 400தான் வருமானம். ஆனாலும் நிதி திரட்ட தட்டமிட்டு, இந்தப் பகுதியில் பிரபலமான மொய் விருந்து நடத்தலாம் என்ற முடிவில் அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்திருக்கிறேன். 

 

புதன்கிழமை காலை மொய் சட்டி வைத்துவிடுவேன். வரும் வாடிக்கையாளர்கள் டீயைக் குடித்துவிட்டு அவர்களால் முடிந்த பணத்தை நோட்டில் எழுதிவிட்டு சட்டியில் போடுவார்கள். மாலை எண்ணி அதை கரோனா நிவாரண நிதியாக கொடுக்க இருக்கிறேன்” என்றார். மேலும், “மொய் விருந்து பத்திரிக்கை என்றால் விருந்துண்டு மொய் செய்து என்றுதான் போடுவோம். ஆனால் என்னால் கறி விருந்து நடத்த முடியாது என்பதால் தேனீர் விருந்து நடத்துகிறேன்” என்றார். இளைஞர் சிவக்குமாரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.