தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா? அரசு நிர்ணயித்த விலையில் தான் விற்கப்படுகிறதா? அதிக விலைக்கு விற்கப்படுகிறதா? என்று டாஸ்மாக் நிறுவனம், சென்னை, உயர்நீதிமன்றத்தில் ஜூன் 26- ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் குள்ளப்படையாச்சி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ‘தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறார்கள். ஒரு பாட்டில் ரூ.70- க்கு மேல் விற்பனை செய்கிறார்கள். இதற்கு ரசீது கொடுப்பதில்லை. அதிக விலைக்கு விற்பனை செய்வதால், மதுபானம் வாங்குபவர்கள் தங்கள் வீடுகளில் மனைவிகளின் நகையெல்லாம் அடமானம் வைத்து சரக்குகளை வாங்குவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003- ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்கத் தடை விதிக்க வேண்டும். விலைப்பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் விசாரித்து, மதுபானங்கள் கொள்முதல் செய்யும் பொழுது தரமானதாக இருக்கிறதா? என்று அரசு சரிபார்த்து கொள்முதல் செய்கிறதா? இதற்கு ஆதாரம் உள்ளதா? இதுவரை எப்படிக் கொள்முதல் செய்தீர்கள்? என்று விளக்கம் அளிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி. விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றனவா? என்று அறிக்கை தரவேண்டும்.
விற்கும்போது ரசீது கொடுக்கப்படுகிறதா? மேலும், ஒவ்வொரு மதுபானக் கடையிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா? அப்படி அதிக விலைக்கு விற்பது கண்டுபிடிக்கப்பட்டு, விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஜூன் மாதம் 25- ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.