Skip to main content

தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும்! சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு!!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

தமிழ்நாட்டை நாக்பூரில் இருந்து ஆள நினைக்கிறது பாஜக; ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தமிழகத்தை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று கருதுகிறது என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் பேசினார். 

 

 

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12, 2019) பரப்புரை செய்தார். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் சேலத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களை ஆதரித்து ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

 

 

பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது: 

 

 Tamils ​​need to rule Tamil Nadu Rahul Gandhi Speech at Salem

 

வரும் மக்களவை தேர்தல் இரண்டு சிந்தனைகளுக்கு இடையேயான போட்டியாகத்தான் இருக்கிறது. பாஜக, ஒற்றை நாடு, ஒற்றை பண்பாடு, ஒற்றை கலாச்சாரம், ஒரே வரலாறு என்பதை நிறுவ முயன்று வருகிறது. ஒரே கருத்துதான் நாட்டை ஆள வேண்டும் என்று கருதுகிறது. காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்த நாட்டின் மீது பல்வேறு பார்வைகள் உள்ளன. இந்த நாட்டில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சிந்தனைகளை அனுசரித்துப் போகும் நோக்கத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

 

 

அவர்களோ (பாஜக), நாக்பூரில் இருந்து தமிழகத்தை ஆள நினைக்கிறார்கள். பிரதமர் அலுவலகமும், அங்குள்ள அதிகாரிகளும்தான் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சக்திகள் என்கிறார்கள் பாஜகவினர். ஆனால், நாங்களோ (காங்கிரஸ்) தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என்று எண்ணுகிறோம். தமிழகத்தின் குரலை நாட்டின் வலிமை மிக்க குரலாக பார்க்கிறோம்.

 

 

தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவை பசுமையான இந்தியாரை உருவாக்க பக்கபலமாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் நாங்கள் கூட்டணியாக இணைந்து பணியாற்றுகிறோம். காங்கிரஸ், எப்போதுமே அதிகாரப்பரவலை விரும்பும் கட்சியாக இருந்து வந்திருக்கிறது. 

 

congress

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை கலைஞர் இறந்தபோது, அவர் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டதாக இங்கே சொன்னார். தந்தையை இழந்த ஒரு மகனின் உணர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் உங்கள் தந்தை, கட்சித் தலைவர் மட்டுமல்ல; அவர் தமிழர்களின் குரலை உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்து  இருந்தார்.

 

 

திமுக, காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் குறிப்பிட்டுப் பேசினார். இந்த தேர்தல் அறிக்கையை நாங்கள் 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் தயாரித்து இருக்கிறோம். ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது, நீட் தேர்வால் தமிழகத்தில் அனிதா என்ற திறமையான மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அதையும் கவனத்தில் கொண்டுதான் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு  உள்ளது. 

 

 

நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிக்கையில் தெரிவித்து இருக்கிறோம். இனியும் ஒரு அனிதா சாவதை நான் விரும்பவில்லை. நாம் கருத்து உரிமையை விரும்புகிறோம். மக்களின் குரலைக் கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம். 

 

 

ஒரு நாள் இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து விட்டார். அதனால் திருப்பூரில் ஏற்றுமதி  நிறுவனங்கள் அழிந்துவிட்டன. தமி-ழ்நாட்டில் ஏராளமான உற்பத்திக்கூடங்கள் முடங்கின. சிறுதொழில்கள் முடங்கின. பணமதிப்பிழப்பு செய்வது குறித்து அவர் யாரையாவது அழைத்துக் கேட்டாரா? எந்த ஒரு சிறுதொழில் முனைவோரையாவது அழைத்து கருத்து கேட்டாரா? ஒரு 12 வயது குழந்தையை அழைத்துக் கேட்டிருந்தால்கூட 500, 1000 ரூபாய் நோட்டை மதிப்பிழக்கம் செய்வது தேவையற்றது என்று பதில் சொல்லியிருக்கும்.

 

 

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அம்பானிக்கும், அதானிக்கும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் மோடி. நாட்டில் 15 பெரிய பணக்காரர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். ஜந்தர் மந்தரில் கோவணத்துடன் போராடிய விவசாயிகளை அழைத்துப் பேச மறுத்தவர்தான் நரேந்திர மோடி. அவர்களை அ-ழைத்துப்பேச வேண்டும் என்ற நாகரிகம்கூட தெரியாதவர்தான் மோடி.

 

 

விவசாயிகளை பார்க்க மறுத்த மோடி, அனில் அம்பானியையும், நீரவ் மோடியையும், விஜய் மல்லையாக்களையும் கட்டித்தழுவுகிறார். ஜிஎஸ்டி என்ற பெயரில் ஐந்து விதமான வரிவிதிப்பை பாஜக கொண்டு வந்திருக்கிறது. 28 சதவீத வரியால் நெசவாளர்கள் நூல் வாங்கக்கூட முடியாமல் திணறுகின்றனர். நெசவு கருவிகள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்

 

 

அதனால்தான் நாம் ஒரே வரி, குறைந்த வரி, எளிமையான வரியை கொண்டு வருவோம் என உறுதி அளித்திருக்கிறோம். இதுமட்டுமின்றி நாட்டின் வறுமை ஒழிப்பில் புரட்சிகரமான திட்டத்தையும் வகுத்து இருக்கிறோம். வறுமை மீதான சர்ஜிகல் ஸ்டிரைக் என்றும் சொல்லலாம். இதற்காக 'நியாய்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நியாய் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழைகளுக்கு மாதம் 6000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் ஏழைகளின் வங்கிக் கணக்கில் 3.60 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கும். ஆண்கள் விரும்பாத பட்சத்தில் அவர்கள் வீட்டுப் பெண்களின் வங்கிக்கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.

 

 

உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற புரட்சிகரமான திட்டம் இல்லை. அதேபோல், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். மத்திய அரசுப்பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். 

 

 

எதற்கெடுத்தாலும் மேக் இன் இந்தியா என்கிறார் மோடி. ஆனால் மொபைல் போன், காலணிகள், சட்டை என எல்லாவற்றிலும் மேட் இன் சைனா என்றே இருக்கிறது. தொழில் தொடங்க வேண்டும் என்றால் எல்லா துறைகளிலும் அனுமதி பெற லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், புதிய  தொழில் கொள்கை வகுக்கப்படும். அதன்படி, தொழில்முனைவோர் முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்த துறையிலும் அனுமதி கேட்டு காத்திருக்கத் தேவையில்லை. அதன்பிறகு அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் போதுமானது. அப்போது உதவிகள் கேட்டாலும் வழங்கப்படும். 

 

 

நாடு முழுவதும் பல்வேறு அரசுத்துறைகளில் காலியாக உள்ள 22 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அந்த பணியிடங்களை நிரப்ப மோடி ஆட்சி தவறி விட்டது. இவை தவிர மேலும் பத்து லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் ஸ்டாலின் முதல்வராக வேண்டும். ஒத்த கருத்துள்ள ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் அமைய வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

 

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.