Skip to main content

"நவ. 1 முதல் மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

tamilnadu schools students class rooms chief minister mkstalin announcement

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (30/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்குவந்து மெல்ல மெல்ல ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அனைத்திலும் குறிப்பாக, வரும் நவம்பர் 1ஆம் நாள், பள்ளிகளில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன. பள்ளிகளை நோக்கித் துள்ளிவரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என்று நான் வரவேற்கிறேன். 

 

இருண்ட கரோனா காலம் முடிந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை மாணவ, மாணவியர் அனைவரும் தொடங்க இருக்கிறீர்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் கல்விச் சாலைக்குள் உங்களை நீங்கள் ஒப்படைத்துக்கொள்ளுங்கள். 

 

1 முதல் 8 வரையிலான வகுப்புகள் கிட்டத்தட்ட 600 நாட்களுக்கும் மேலாக நடைபெற இயலாத நிலை இருந்தது. ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் அந்த வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிகளுக்கும் வர இயலாத சூழல் இருந்தது. கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்விச் சாலைகளின் கதவுகளைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இந்த உன்னதமான சேவைக்கும், உழைப்புக்கும் காரணமான அனைவருக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும்வகையிலும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது நம் அனைவரின் கடமையாகும்.

 

கல்விச் சாலைகளின் கதவுகளை நோக்கி வரும் மாணவர்களை வரவேற்க நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களையும், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளையும், தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப் போல வரவேற்பு கொடுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

 

ஏற்கெனவே அவர்களுக்கு அறிமுகமான பள்ளியாக இருந்தாலும், ஒரு பெரும் நெருக்கடிக்குப் பிறகு அந்தப் பிள்ளைகள் வருகிறார்கள். 'கரோனா'வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், 'கரோனா குறித்த பயம்' மக்கள் மனதில் இருக்கிறது. அதுவும் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் அதிகம் இருக்கிறது. ஒருவிதமான பரிதவிப்புடன் வரும் பிள்ளைகளின் பயம் போக்கி அரவணைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

 

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வரவேற்பு கொடுங்கள். இனிப்புகளை வழங்குங்கள். மலர்க் கொத்துகளையும் வழங்கலாம். எதை வழங்கினாலும் அத்தோடு அன்பையும் அரவணைப்பையும் நம்பிக்கையையும் சேர்த்து வழங்குங்கள்.

 

முதல் இரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள் என்று ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பள்ளி சார்ந்த கற்றலில் குழந்தைகள் ஈடுபட இயலாத காரணத்தால் அந்தந்த வகுப்புக்குரிய திறன்களை முழுமையாக அடைய முடியாத நிலை இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஈடுசெய்யும் விதமாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். அதற்கான புத்தாக்கப் பயிற்சியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோளை ஏற்று, மாணவச் செல்வங்கள் பள்ளிக்கு வரும் நாளை இனிய நாளாக மாற்றுங்கள். பள்ளிக்கு வரும் பிள்ளைகளை நேசமுடன் கண் போலப் போற்றுங்கள்.

 

மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதன் மூலமாக மாணவர்ளை மீண்டும் உற்சாகப்படுத்துவோம்! மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதன் மூலமாக எதிர்கால மனித ஆற்றலை உருவாக்குவோம்!

 

இதன் மூலமாக மாணவர்களை உற்சாகப்படுத்துவதற்காக மட்டுமல்ல, நமக்கும் நமது பள்ளிக்கால உற்சாகத்தைப் பெறலாம்.

வாருங்கள்!

 

நாம் அனைவரும் சேர்ந்து நம் குழந்தைகளைக் கொண்டாடுவோம்!" இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.