/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mksta3_6.jpg)
தமிழ்நாடு காவல்துறையினர் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (03/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கடந்த 13/09/2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில், 'காவலர்கள் தங்கள் உடல்நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்கப்படும்' என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)