Skip to main content

வேட்டி, சட்டை, புடவை, தடுப்பூசி; உதயநிதி தொகுதியில் அசத்தல் பொங்கல்!

Published on 16/01/2022 | Edited on 16/01/2022

 

தி.மு.க.வின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சமில்லாத ஆட்சியை வழங்குவோம்” என்றார். அவரது மகனும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, இதனை மெய்ப்பிக்கும் வகையில் தனது தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கி வருகிறார்.

 

தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது, கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி. வீடு வீடாகக் கணக்கெடுக்கப்பட்டு மளிகைப் பொருட்களை வழங்கி வந்த நிலையில், கரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடுவது தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, தொகுதியில் வீடு வீடாக சென்று தடுப்பூசி விழிப்புணர்வுப் பரப்புரையை மேற்கொண்டார் உதயநிதி. குறிப்பாக, எளிய மக்கள் வாழும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

 

ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. வீட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர், அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர், தடுப்பூசி போட்டுக் கொண்டவர் எத்தனை பேர், எந்த தேதியில் போடப்பட்டது என்ற விவரம் அனைத்தும் வீட்டு வாசலில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டது. தடுப்பூசி போட்டுக் கொண்ட குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. சேப்பாக்கம் தொகுதியின் நடைமுறையைப் பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது பற்றி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுப் பேசினார். வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் திட்டமும் மாநில அளவில் அறிவிக்கப்பட்டது.

 

தற்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஏறத்தாழ 95% பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள். 70%க்கு மேல் இரண்டாவது டோஸ் போட்டுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரம் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கும், திமுகவினருக்கும் பொங்கல் பரிசுகளை வழங்குமாறு மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர்களான ஏறத்தாழ 5000 பேருக்கு பொங்கலுக்கான துணிமணிகளுடன் காலண்டரையும் வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி. அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தவர், தொகுதி வாக்காளர்களிடமும் அந்த மகிழ்ச்சியை எதிர்பார்த்து, அனைவரது குடும்பத்தினருக்கும் புடவை, வேட்டி, சட்டை வழங்க முடிவு செய்தார்.

 

வாக்காளர்களின் குடும்பங்களுக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே டோக்கன் வழங்க, அதனடிப்படையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சேப்பாக்கம் பகுதியில் மூன்று வார்டுகள், திருவல்லிக்கேணி பகுதியில் மூன்று வார்டுகள் என உதயநிதியே நேரடியாகச் சென்று பொருட்களை வழங்குகிறார். இல்லத்தரசிகளானப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

 

பொங்கல் பரிசு பெறுபவர்களிடம், “தடுப்பூசி போட்டாச்சா?” என்று கேட்டு, விழிப்புணர்வைத் தொடர்ந்து மேற்கொள்கிறார் உதயநிதி. தற்போது போடப்பட்டு வரும் 15-18 வயதுள்ளவர்களுக்கான தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி பற்றியும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. மகிழ்ச்சியும் விழிப்புணர்வும் சேர்ந்து பொங்குகிறது உதயநிதி தொகுதியில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Next Story

தென்சென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) தென் சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

படங்கள் - எஸ்.பி.சுந்தர்