Skip to main content

கீழ்த்தரமான முயற்சியில் மத்திய அரசே ஈடுபடுவது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கிறது - ஸ்டாலின்

Published on 10/02/2019 | Edited on 10/02/2019
st


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை:   "அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதற்காக தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த விடாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று, எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற தவியாய்த் தவித்து அங்குமிங்கும் அலையும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வாக்குறுதி அளித்து இருப்பதாக வரும் பத்திரிகைச் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க அரசு அடிக்கும் கொள்ளைகளையும், அமைச்சர்களும் முதலமைச்சரும் ஈடுபட்டுள்ள இமாலய ஊழல்களையும், நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி, தேர்தல் லாபம் எனும் மிகக்குறுகிய நோக்கில், மூடி மறைக்கும் கீழ்த்தரமான முயற்சியில் மத்திய அரசே ஈடுபடுவது வெட்கக்கேடாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

 

18 சட்டமன்றத் தொகுதிகள் காலியாகி, ஏறக்குறைய 15 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இப்போது வருகின்ற மக்களவைத் தேர்தலுடனும் அதற்கு இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என்று மத்திய பா.ஜ.க அரசு திரைமறைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், அரசியல் சட்டத்தின்படி அமைந்துள்ள தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி மிகவும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.  அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணையை மத்திய அரசு முடக்கி வைத்தது. ஊழல் டிஜிபி ஒருவர் பதவியில் நீடிக்க மத்திய அரசு நேரடியாக உதவிசெய்து ஒத்துழைக்கிறது. ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் என்ற வகையில், 84 கோடி ரூபாய் பணம் கொடுத்த வழக்கினை, யாருக்குமே தெரியாமல் ரகசியமாக “க்ளோஸ்” பண்ண வைத்து, அதைக் கண்டும் காணாமல் தேர்தல் ஆணையமும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது.  ஊழலை ஒழித்துக் கட்டுவோம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் வீராவேசமாகப் பேசிக்கொண்டே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரை டஜன் அமைச்சர்களை, ஊழல் விசாரணையிலிருந்து பா.ஜ.க அரசு தப்பிக்க வைத்தது. அரசுக்கு எதிராகவே வாக்களித்த திரு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை, தகுதி நீக்கம் செய்யாத அ.தி.மு.க அரசை இருகரமும் இணைத்து வாரியணைத்து பாசத்தைப் பொழிந்து, ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமாகக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. சிறப்பு நீதிமன்றத்தால் மூன்று வருடம் சிறைத்தண்டனை பெற்ற பிறகும்' முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி தானாகவே காலியான நிலையிலும், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே உதாசீனப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷனுக்கு மத்திய பா.ஜ.க அரசு இன்னமும் கடுமையான நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசில் தேர்தல் ஆணையமும், அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளும் பா.ஜ.கவின் “ப்ரைவேட் லிமிடெட்” கம்பெனி போல் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு நினைப்பது மிகவும் ஆபத்தான அரசமைப்புச் சட்ட பச்சைப் படுகொலை. வருமான வரித்துறையும் சி.பி.ஐயும் இதுவரை அ.தி.மு.க அமைச்சர்கள் மீதும், முதலமைச்சருக்கு வேண்டிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மீதும் நடத்திய ரெய்டுகள் அத்தனையும் 'தேர்தல் ஆதாயம்' என்ற ஒரே காரணத்திற்காக, முற்றிலும் மூட்டை கட்டி மூலையிலே கிடத்தப்பட்டுள்ளது. அந்த ஊழல் வழக்குகளையும் வருமானவரித்துறை விசாரணைகளையும் காட்டி முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமியை ஒவ்வொரு நாளும் மிரட்டி, பொருந்தாத் தேர்தல் கூட்டணிக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிற பா.ஜ.க அரசு, 60 முதல் 70 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல் தவிப்பதைக் கண்டுகொள்ளத் தயாராகவே இல்லை.

 

இருபத்தோரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால், தன் ஆட்சி நிச்சயமாகப் பறிபோய்விடும் என்ற பயத்திலும் மேலும் மேலும் கொள்ளை அடிக்கும் வாய்ப்பு பறிபோய்விடும் என்ற மன இறுக்கத்திலும் உழன்று கொண்டு இருக்கும் எடப்பாடி திரு. பழனிசாமி வைத்த "இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்" என்ற மக்கள் விரோதக் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க அரசு நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே வேட்டு வைக்கும் பயங்கரமாகும்.

 

மக்களவைத் தேர்தலில் ஏதாவது ஒரு "கொடியை"ப் பிடித்துக்கொண்டு, மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து மூச்சு முட்டவாவது கரையேறிக் காப்பாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்று தடுமாற்றத்தில் இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, ஊழல் மயமாகிவிட்ட அ.தி.மு.க அரசையும் "கமிஷன் – கலெக்ஷன் - கரெப்ஷன்" என்று தினமும் தமிழக மக்களின் வரிப் பணத்தை வாரிக் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே அற்ப காரணத்திற்காக செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தை கிள்ளுக் கீரையாகவும், அரசியல் சட்ட மாண்புகளை தன்னுடைய கால் தூசுகளாகவும், ஆணவத்திலும் அகங்காரத்திலும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைப்பது, சுதந்திர இந்தியாவில் இதுவரை கண்டிராத ஒரு ஆபத்தான அலங்கோலம்; கண்கூசும் காட்சி.

 

அரசியல் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு பிரதமர் அந்தச் சட்டத்தையும், அது அமைத்துக் கொடுத்த தன்னாட்சி அமைப்புகளையும் ஒரு கட்சியின் பயன்பாட்டிற்காக - ஒரு கட்சியின் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியது திரு நரேந்திர மோடிதான்! அவர் தலைமை யிலான பா.ஜ.க அரசு இந்திய அரசியல் சட்டத்திற்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் பேரிடர் போல் ஏற்பட்டுவிட்ட ஒரு கஜா புயல் போன்றது என்றே கருதுகிறேன். இந்த அரசியல் விபத்து, 130 கோடி இந்திய மக்களால் வெற்றிகரமாகக் கடந்து மேலேறிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 

ஆகவே, மத்திய பா.ஜ.க அரசின் நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டு விடாமல், தேர்தல் ஆணையம் தனக்கு இருக்கும் அரசியல் சட்ட சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்தி, ஜனநாயக மானை சர்வாதிகார வேங்கையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பா.ஜ.க அரசின் வற்புறுத்தலுக்குப் பணிந்தால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் ஆணையம், ஒரு மிக மோசமான "வரலாற்றுப் பிழையை" செய்துவிட்ட  ஒரு கருப்பு அத்தியாயம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என்றும்; அது மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும்; எச்சரிக்க  விரும்புகிறேன்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.