
சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர்லைன் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). இவரது மனைவி செல்வி வயது (48). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும்போது நிறுவனத்தின் 3 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்துவிட்டார்.
இதனையறிந்த அந்நிறுவனம் தேவேந்திரனை பணிநீக்கம் செய்ததுடன், இதுகுறித்து அவர் மீது கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகாரளித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தேவேந்திரனின் பெற்றோர் ஒரு வாரத்தில் பணத்தை ஒப்படைப்பதாக போலீசில் உறுதி அளித்தனர். ஆனால், அவர்கள் உறுதியளித்தபடி பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தேவேந்திரன் நேற்று காலை தலைமறைவாகி விட்டார். இந்நிலையில், தேவேந்திரனின் தாயார் செல்வி இதுகுறித்து மிகவும் மனவேதனை அடைந்து விரக்தியில் இருந்துள்ளார். நேற்று மதியம் காணவரும் வீட்டை விட்டு வெளியில் சென்றிருந்த நிலையில், தனிமையில் இருந்த செல்வி வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.