Skip to main content

இரிடியம் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Six arrested for iridium scam

 

கோவையில் உள்ள  ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல், கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டிவருவதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனையிட்டபோது அங்கு கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த 8 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்போது இரிடியம் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்கு கூடியிருந்ததும் தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போஜராஜ், கோவையைச் சேர்ந்த முருகேசன், செந்தில்குமார்,  வெங்கடேஷ் பிரபு ஆகியோர் பிடிபட்டனர். மேலும் இவர்கள், கேரளாவில் உள்ள ரைஸ் புல்லிங் மோசடி கும்பலைச் சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கேரளாவைச் சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அணுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறிய இந்தக் கும்பல், பல தவணைகளாக ரூ. 27 லட்சம்வரை பணத்தைப் பறித்துள்ளனர்.

 

ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்தக் கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்துவந்துள்ளனர். அதாவது, சாதாராண வெங்கல செம்பை பெட்டிக்குள் வைத்து, பெட்டிக்குள் மிளகாய் ஸ்பிரேவை அடித்து வைத்துக்கொண்டு, பின்னர் வாங்க வருவோரிடம் கவச உடைகளை அணிந்துகொண்டு வெளியே எடுக்கும்போது, அந்த இரிடியத்திற்கு எத்தனை சக்தி உள்ளது என்பதைப் பார்த்தீர்களா? எனச் சொல்லி  ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கும்பலைச் சேர்ந்த 6 பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து 99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2 கார்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவைச் சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.