வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சென்னையில் வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது. சமூக விரோதிகள் பொதுக்குழுவுக்கு வந்து பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளதாக டி.ஜி.பி.யிடம் தெரிவித்தோம். பொதுக்குழுவை சீர்குலைக்க சமூக விரோதிகள் வர வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு கேட்டுள்ளோம். சமூக விரோதிகளைத் தூண்டிவிட்டு பொதுக்குழுவில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.
சிலரின் தூண்டுதலின் பேரில் பொதுக்குழுவில் சதிசெயலில் ஈடுபட சிலர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. டி.டி.வி.தினகரன் செயற்கையாகக் கூட்டத்தைக் கூட்டி தனக்கு ஆதரவு உள்ளதாக காட்டிக் கொள்கிறார். டீசல் விலை ஏறியுள்ள நிலையில், சசிகலா ஊர் ஊராக பயணம் செய்வது வீண் வேலை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வருவதற்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "கட்சிக்கு எதிராக அ.தி.மு.க.வினர் யார் செயல்பட்டாலும் நீக்கப்படுவர்" என்றார்.