Skip to main content

"ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Seeman urges Tamil Nadu government

 

சிறப்பு முகாம்களில் இருக்கும் ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், "திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் கடந்த ஒரு வார காலமாகத் தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமாகி வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன். தமிழர்களின் பெருத்த தாய்நிலமான தமிழ்நாட்டிலேயே தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் மிகுந்த மனவேதனையைத் தருகிறது. ஈழத்தமிழர் எனும் ஒற்றைக் காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தை மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் திமுக அரசின் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது.

 

திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் தங்கள் விடுதலையை வேண்டி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 8 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் ஈழச்சொந்தங்கள் 10 பேரை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டுகொள்ள மறுத்து வருவது பெரும் மனவலியை அளிக்கிறது. ஈழச்சொந்தங்களுக்குத் தமிழ்நாட்டில் நிகழ்ந்தேறும் இத்தகைய கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத அதிகாரமற்ற கையறு நிலையும் ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.

 

இலங்கையை ஆளும் சிங்களப்பேரினவாத அரசு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, பன்னெடுங்காலமாக அந்நிலத்தில் கடைபிடிக்கப்படும் இனவெறி கொள்கையால் பாதிக்கப்பட்டு, நிர்கதியற்ற நிலையில் மறுவாழ்வுக்காக ஈழ உறவுகள் தாய்த்தமிழகத்திற்கு உயிரை பணையம் வைத்து வருகின்றனர். அவ்வாறு அடைக்கலம் புகும் ஈழச்சொந்தங்களுக்கு கருணை அடிப்படையில் வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்குமானால் அவற்றை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்குறிக்கலாம். அதற்கு மாறாக, அவர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, ஒவ்வொரு நாளும் துன்புறுத்தும் சிறைக்கூடங்களைச் சிறப்பு முகாம் என்று கூறுவது கேலிக்கூத்தானது. இவ்வதைக்கூடங்கள் அடிப்படையான மனித உரிமைகளையே முற்றாக மறுத்து, ஈழச்சொந்தங்களுக்குப் பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

 

தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அங்குப் பசி, பட்டினியில் வாடும் தங்களது குடும்பங்களையும், உறவுகளையும் பார்க்க வேண்டும், அவர்களது துன்பத்தில் தோள்கொடுத்துத் துணைநிற்க வேண்டும் என்று போராடிவரும் ஈழச்சொந்தங்களது கோரிக்கை மிகமிக நியாயமானது. தமிழக முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கக்கூட மறுத்துவருவது சிறிதும் மனிதநேயமற்ற, அதன் கொடுங்கோன்மை மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் திமுகவின் கடந்த கால வாக்குறுதிகள் யாவும் தேர்தல் நேரத்து வெற்று நாடகங்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

ஆகவே, திமுக அரசிற்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது சிறிதளவேணும் அக்கறை இருக்குமாயின், இனியும் இவ்விடயத்தில் இரட்டைவேடமிடுவதை நிறுத்தி, ஈழத்தமிழ்ச் சொந்தங்களைக் கண்காணிக்க திமுக அரசால் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட க்யூ பிராஞ்ச் எனப்படும் கொடும் காவல் பிரிவினை உடனடியாகக் கலைக்க வேண்டுமெனவும், சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும், ஈழச்சொந்தங்களின் மறுவாழ்விற்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தற்போது பட்டினிப் போராட்டத்தால் உடல் நலிவுற்றிருக்கும் திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களின் உயிரைக்காக்க உயர் மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்