Skip to main content

ஜோசப் கருணை இல்லத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் சாலவாக்கம் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

Published on 10/03/2018 | Edited on 10/03/2018
joseph1

 

பாலேஸ்வரம் ஜோசப் கருணை இல்லத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை ஒரு வார காலத்தில்  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்கள் இறந்த பின்னர் சட்டவிரோதமாக அவர்களது எலும்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இல்லத்தில் சேர்க்கப்படும் முதியவர்கள் 4 நாட்களுக்குள் மர்மமான முறையில் இறப்பதாகவும், நகராட்சியிடம் முறையான அனுமதி வாங்காமல் அவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப் படுவதாகவும் குற்றம்சாட்டிய தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் தமிழக டிஜிபி-யிடமும், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்தது. கருணை இல்லம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யக் கோரி சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி பிப்ரவரி 22ல் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 16ஆம் தேதிக்குள்  சாலவாக்கம் ஆய்வாளர் பதிலளிக்க  உத்தரவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சூர்யா சிவாவின் மனு; ‘போலீஸ் பாதுகாப்பு பேஷனாக மாறிவிட்டது?’ - நீதிபதி பரபரப்பு கருத்து

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Judge sensational comment for Surya Siva petition

கடந்த ஆண்டு பா.ஜ.கவைச் சேர்ந்த சூர்யா சிவாவிற்கும், பாஜகவின் சிறுபான்மை அணியின் டெய்சி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டு அவர் வகித்து வந்த பதிவியில் பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், சூர்யா சிவா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு இன்று (15-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, “மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம், ஒருவர், இருவர் போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது” என்று கருத்து கூறி அரசு தரப்பு வாதத்தை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.