Skip to main content

பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் தனிமை… மாமூல் வேட்டை! எஸ்.ஐ. உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்!!

Published on 09/11/2021 | Edited on 10/11/2021

 

salem police commissioner order police suspended

 

சேலத்தில், பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு தனிமையில் இருந்ததுடன், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை எஸ்.ஐ. உள்பட நான்கு போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.  

 

சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன், அதிமுக பிரமுகர். இவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் தேஜ் மண்டல் (வயது 27) என்ற இளம்பெண் வசித்துவந்தார். இவர், தனது காதலனான சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவருடன் சேர்ந்து சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் அழகுநிலையம் மற்றும் மசாஜ் மையம் ஆகியவற்றை நடத்திவந்தார். 

 

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி, பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒரு சூட்கேஸ் பெட்டியில் கை, கால்கள் மடக்கிக் கட்டப்பட்ட நிலையில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இவர், தன்னுடைய மசாஜ் மையத்தில் வேலை செய்துவந்த ஆண் ஒருவரையும், பெண்கள் மூவரையும் தான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்திலேயே தனியாக ஒரு அறை எடுத்து தங்க வைத்திருந்தார். 

 

அவரிடம் வேலை செய்துவந்த லப்லு, நிஷி ஆகிய இருவரும் தேஜ் மண்டல் கொலைக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டனர். காதலர்களான அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சொந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடி தனிப்படை காவல்துறையினர் வங்கதேசம் விரைந்துள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தேஜ் மண்டல் தனது மசாஜ் மையத்தில் அழகுக்கலை மற்றும் மசாஜ் சேவை அளிக்கும் போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது  தெரியவந்தது. 

 

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாலியல் தொழிலை ஒழிக்கும் வகையில் சேலம் மாநகரில் உள்ள அனைத்து மசாஜ் மையங்களிலும் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

 

அப்போது பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதாகவும், பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் பல புரோக்கர்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தேஜ்மண்டலும் அதே குற்றத்தில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவர் அப்போது கைதாகாமல் தப்பிச் சென்றுள்ளார். 

 

இதன் பின்னணியில் சேலம் மாநகர போலீசார் சிலர் தேஜ்மண்டலிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டிருப்பதும், அவ்வப்போது அவருடைய மசாஜ் மையத்தில் உள்ள பெண்களுடன் தனிமையில் இருந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இத்தகவல்கள், சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நடத்திய விசாரணையில், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய எஸ்.ஐ. ஆனந்தகுமார், சிறப்பு எஸ்.ஐ. சேகர், காவலர் கலைச்செல்வன், தலைமைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் மசாஜ் செய்யும் பெண்களுடன் தனிமையில் இருந்ததும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

 

இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை துணை ஆணையர் மாடசாமி, மாநகர காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, சமூக விரோத செயல்களுக்குத் துணை போனதாக எஸ்.ஐ. ஆனந்தகுமார் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நான்கு பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். 

 

இச்சம்பவம், குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.