Skip to main content

சேலம் அருகே தனியார் சொகுசு பேருந்து 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது! ஒருவர் பலி; 16 பேர் பலத்த காயம்!

Published on 14/02/2019 | Edited on 14/02/2019
a

 

சேலம் அருகே, தனியார் சொகுசு பேருந்து 30 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஒருவர் பலியானார்.


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 28 பயணிகளுடன் எஸ்ஆர்எஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான குளிர்சாதனம் மற்றும் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பேருந்து, செவ்வாய்க்கிழமை இரவு (பிப்ரவரி 12) 10.30 மணியளவில் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. பேருந்தின் மேற்கூரையில் 3 டன் அளவுக்கு பயணிகளின் சரக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) என்பவர் ஓட்டினார். 

 

a


இந்நிலையில், புதன்கிழமை (பிப்ரவரி 13) அதிகாலை 4.30 மணியளவில், அந்த பேருந்து சேலத்தைக் கடந்தது. கொண்டலாம்பட்டி பட்டாம்பூச்சி மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென்று 30 அடி உயரத்தில் இருந்து பேருந்து கீழே பாய்ந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த பயணிகள் அலறினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்து அவர்களையும் நிகழ்விடத்திற்கு வரவழைத்தனர். அதிகாலை நேரம் என்றும் பாராமல் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், துணை ஆணையர்கள் தள்கதுரை, ஷியாமளாதேவி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் நிகழ்விடத்திற்கு நேரில் வந்தனர். பேருந்து விழுந்த பகுதியில் முள்புதர்கள் நிறைந்து காணப்பட்டதால், புதருக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. 


தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பேருந்தின் இடிபாடு மற்றும் முள்புதர்களுக்குள் சிக்கிக்கொண்டவர்களை பத்திரமாக மீட்டனர். இவர்களில் திருப்பூரைச் சேர்ந்த தனசேகரன் (47) மட்டும் நிகழ்விடத்திலேயே இறந்தார். 


பைசல்கான், சிவசங்கர், சாந்தி, ரவி, ஜெயலட்சுமி, பிரபாகர், அஷ்வின், துரைசாமி, அவினாஷ், தில்முகமது, வாசுதேவன், பிரபாகரன் உள்பட 16 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 4 பேருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது. 


அதிவேகம், அதிக பாரம் ஏற்றியது ஆகிய காரணங்களால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். 


சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, நிகழ்விடத்திற்கு நேரில் வந்து விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், ''பயணிகள் பேருந்துகளில் கண்டிப்பாக பயணிகளை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும். சரக்குகளை ஏற்றிச்செல்லக் கூடாது,'' என்றார். 

 

c


இந்த பேருந்தில் வந்த உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கணேசன், மனைவி ஈஸ்வரி, குழந்தைகள் அவந்திகா (9), பாலரூபன் (3) ஆகிய நால்வரும் நல்வாய்ப்பாக சிறு காயம்கூட இல்லாமல் தப்பித்தனர். 


விபத்து குறித்து ஈஸ்வரி கூறுகையில், ''உடுமலையில் கோயில் திருவிழாவுக்காக செல்கிறோம். அதிகாலை நேரத்தில் எல்லோரும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று பேருந்து பறந்து செல்வதுபோல இருந்தது. என்னவென்று யோசிப்பதற்குள் பேருந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தது. பேருந்து விழுந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது,'' என்றார். 


இந்த சம்பவத்தால் பட்டாம்பூச்சி மேம்பாலத்தில் சில மணி நேரத்திற்கு வாகனப்போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்