Skip to main content

குடும்பச்செலவுக்கு காசில்ல...குடிப்பதற்கு மட்டும் ஏது பணம்? கேள்வி கேட்ட மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவன்!

Published on 01/04/2021 | Edited on 01/04/2021

 

salem district husband and wife incident police investigation

 

சேலம் அருகே, ‘குடும்பச் செலவுக்கு கேட்டால் பணம் இல்லை என்கிறீர்கள்; மது குடிப்பதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வருகிறது?’ என்று கேள்வி கேட்ட மனைவியை, கணவன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள ஆணைக்கவுண்டர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 31). சேலத்தில் தையல்காரராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 29). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

 

விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. சம்பாதிக்கும் பணத்தை மது குடிப்பதற்காக அதிகமாக செலவு செய்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளுக்கும் சரியாக பணம் தருவதில்லை.

 

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 30) இரவு, மது போதையில் விஜயகுமார் வீடு திரும்பியுள்ளார். இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த ஈஸ்வரி, 'குடும்பச் செலவுக்கு கேட்டால் பணம் இல்லை என்கிறாய்... குடிப்பதற்கு மட்டும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது?' எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். 

 

இதில், அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு, கோபம் தணிந்து, ஈஸ்வரி தூங்கச் சென்றுவிட்டார். பலர் முன்னிலையில் மனைவி தன்னை கேள்வி கேட்டு அசிங்கப்படுத்திவிட்டதாகக் கருதிய விஜயகுமார், தூங்கிக்கொண்டிருந்த ஈஸ்வரியின் கழுத்தைக் கயிற்றால் நெரித்தார். 

 

இதனால் ஈஸ்வரி மூச்சுப்பேச்சின்றி கிடந்தார். பின்னர் விஜயகுமாரே, நங்கவள்ளி காவல் நிலையத்திற்குச் சென்று, குடிபோதையில் தன் மனைவியின் கழுத்தைக் கயிற்றால் நெரித்துவிட்டதாகவும், அவர் என்ன ஆனார் என தெரியவில்லை என்றும் கூறி, சரணடைந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மருத்துவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்து பார்த்தபோது, படுக்கையில் ஈஸ்வரி சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. விஜயகுமார் கயிற்றால் நெரித்ததால் அவர் இறந்துள்ளார்.

 

சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நங்கவள்ளி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.