Skip to main content

செல்போன் பேச்சில் மயங்கிய வாலிபர்; ஹெச்ஐவி நோயில் சிக்கிக்கொண்ட பரிதாபம்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

 

salem district cell phone speech mens


இளம்பெண்ணின் செல்போன் பேச்சில் மதிமயங்கிய வாலிபர், அவரால்தான் தனக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று ஏற்பட்டதாகக் கூறி, சேலம் நீதிமன்ற வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் அஸ்தம்பட்டி அருகே, மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்களன்று (ஜன.11) மாலை இளம்பெண்ணும், வாலிபரும் தகராறில் ஈடுபட்டிருந்தனர். ஒருவருக்கொருவர் சரமாரியாக ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்கள், இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். ‘ஏன் தகராறு செய்கிறீர்கள்’ என்று அந்த வாலிபரிடம் கேட்டபோது, ''எனக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, எனக்கு நோயைப் பரப்பியது இந்தப் பெண்தான். என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டாள்,'' என்றும் குற்றம் சாட்டினார். 

 

விசாரணையில் அந்த வாலிபர், சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. அவர், சேலத்தில் உள்ள ஒரு பிரபலமான நகைக்கடையில் நகை சீட்டு போட்டுள்ளார். நகை சீட்டு பிரிவில் வேலை செய்து வந்த இளம்பெண், மாதந்தோறும் நகை சீட்டு தவணை செலுத்துமாறு வாலிபருக்கு செல்போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். மேலும், அவ்வப்போது புதிதாக வரும் நகை சீட்டுத் திட்டங்கள் பற்றியும் கூறியுள்ளார். 

 

செல்போனில் இளம்பெண்ணின் குரலைக் கேட்ட அந்த வாலிபர், குரல் இனிமையாக இருக்கிறது. பின்னணி பாடகி சித்ராவின் குரல் போல் இருக்கிறது என்றெல்லாம் அசடு வழிந்துள்ளார். இப்படியே நீண்ட அவருடைய பேச்சு, இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்தப் பெண், தனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்வதாகவும், தற்போது சேலம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். 

 

சின்ன வயதிலேயே எனக்கு திருமண வாழ்வு முடிந்து விட்டது என்றும் அந்த இளம்பெண் அழுது புலம்பியுள்ளார். ஏற்கனவே அவரின் குரலில் வழுக்கி விழுந்துவிட்ட வாலிபர், “உனக்கு விவாகரத்து கிடைத்தவுடன், நானே திருமணம் செய்துகொள்கிறேன். கடைசி வரை உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன்” என்றும் உறுதி அளித்திருக்கிறார். இதனால் அவர்களிடையே அந்தரங்க சமாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம் அதிகரித்தது. 

 

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். ஒரு தனியார் விடுதியில் தனிமையில் சந்தித்துக்கொண்ட அவர்கள், அங்கு 'நெருக்கமாக' இருந்துள்ளனர். அதற்கு அடுத்த சில மாதங்களில் வாலிபருக்குத் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. தனியார் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது, வாலிபருக்கு ஹெச்ஐவி நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 

 

மனம் உடைந்த அந்த வாலிபர் இளம்பெண்ணை சந்தித்து, 'எனக்கு எய்ட்ஸ் நோயை பரப்பி விட்டுட்டியே' எனக் கேட்டு தகராறு செய்துள்ளார். ஜன. 11ம் தேதியன்று, விவாகரத்து வழக்குக்காக அந்த இளம்பெண் நீதிமன்றம் வந்திருப்பதை அறிந்துகொண்டு வாலிபரும் அங்கு வந்துள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே இளம்பெண்ணிடம், 'எனக்கு நோய் வந்ததற்கு நீதான் காரணம். இன்னும் கொஞ்ச காலத்தில் நான் செத்துவிடுவேன். என் சாவுக்கும் நீதான் காரணம்,' என்று கூறி ஆபாச வார்த்தைகளால் சரமாரியாக திட்டியுள்ளார். பதிலுக்கு அந்தப் பெண்ணும் அவரை திட்டித்தீர்த்துள்ளார். 'எனக்கு எய்ட்ஸ் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது. அப்படி இருக்கும்போது நான்தான் காரணம் என்று ஏன் கூறுகிறாய்?' என்றும் அந்தப் பெண் கேட்டுள்ளார். 

 

அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும் சத்தம் கேட்டு வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். அவர்களிடம் விசாரித்தபோதுதான் மேற்காணும் விவரங்கள் தெரிய வந்தன. பிறகு, கடைசியில் இருவரையும் சமாதானப்படுத்திய பொதுமக்கள், தனித்தனியாக பிரித்து அனுப்பி வைத்தனர். 

 

ஆணோ, பெண்ணோ தகாத உறவு கொண்டால் இத்தகைய சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். அதனால் இருபாலரும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வதே உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் நல்லது என்று பொதுமக்கள் கூறியபடி அங்கிருந்து கலைந்து சென்றனர். அதேநேரம், அந்தப் பெண்ணும் உடனடியாக தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்வது அவசியம் என்றும் கூறினர். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.