Skip to main content

சேலம் அருகே மாயமான கார் டிரைவரை கொன்றது ஏன்? பரபரப்பு வாக்குமூலம்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

salem district car driver incident police investigation

 

சேலம் அருகே மாயமான கார் ஓட்டுநரைக் கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான இரு வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள எம்ஜிஆர் காலனி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார். அத்துடன் சொந்தமாக காரும் ஓட்டிவந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா.

 

அக். 16ஆம் தேதியன்று, தொழில் சம்பந்தமாக வெளியே சென்றுவிட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றவர், அதன்பின் மூன்று நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

 

இதனால் பதற்றமடைந்த வெண்ணிலா, கணவரைக் காணவில்லை என தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 19ஆம் தேதியன்று காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, ரமேஷ் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். 

 

இந்த நிலையில்தான், மாயமான ரமேஷ் கொலை செய்யப்பட்டதாக ஊருக்குள் திடீரென்று தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், தாரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரினர். 

 

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், ரமேஷ் கொலை செய்யப்பட்டது உறுதியானது. காவல் ஆய்வாளர்கள் குமார், தொல்காப்பியன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

 

தனிப்படையினர், சந்தேகத்தின்பேரில் தாரமங்கலத்தைச் சேர்ந்த சேகர் (வயது 28) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. 

 

கொலை செய்யப்பட்ட ரமேஷும், சேகரும் நெருங்கிய நண்பர்களாக பழகிவந்துள்ளனர். இருவரும் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்துள்ளனர். 

 

தொழில் நிமித்தமாக சேகர் வீட்டுக்கு அடிக்கடி ரமேஷ் சென்று வந்துள்ளார். அப்போது சேகருடைய மனைவியுடன் ரமேஷுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சேகருக்கு தெரியாமல் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். 

 

இதையறிந்த சேகர், அவர்கள் இருவரையும் கண்டித்திருக்கிறார். ஆனாலும் ரமேஷ், அவருடைய மனைவியை ரகசியமாக சந்திப்பதை தொடர்ந்தார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சேகர், இதற்கு மேலும் ரமேஷை உயிருடன் விட்டு வைத்தால் தன் குடும்பத்தைச் சிதைத்துவிடுவார் எனக் கருதி, அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். 

 

தனது திட்டத்தை வேறு சில நெருக்கமான நண்பர்களிடமும் கூறி உதவிக்கு அழைத்துள்ளார். அத்திட்டப்படி கடந்த 16ஆம் தேதியன்று, பழைய கார் ஒன்று விற்னைக்கு வந்துள்ளது. அதை நேரில் பார்க்க வருமாறு சேகரின் நண்பர்கள் அழைத்துள்ளனர். 

 

வீட்டிலிருந்து கிளம்பிய ரமேஷை வழியிலேயே 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியுள்ளனர். காரில் செல்லும்போதே அவரை அந்த கும்பல் சரமாரியாக அடித்தே கொன்றுள்ளது. 

 

சேகரின் அக்காள் மகன்கள் இரண்டு பேர் பெங்களூருவில் கல் உடைக்கும் தொழிலாளிகளாக உள்ளனர். அவர்களும் அந்தக் காரில் இருந்ததால், சடலத்தைப் பெங்களூருவுக்குக் கடத்திச் சென்று ஏரியில் வீசிவிடலாம் என யோசனை தெரிவித்துள்ளனர். அதன்படியே சடலத்தைப் பெங்களூருவுக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஒரு ஏரியில் வீசிவிட்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சடலம் தண்ணீரில் மிதந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் சடலத்துடன் பெரிய கல்லைக் கட்டி வீசியுள்ளனர். 

 

ஆனால் சடலம் அழுகியதால் கட்டப்பட்டிருந்த கல்லும் நெகிழ்ந்து, தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் சடலம் நீருக்கு மேல் மிதந்துள்ளது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் நிலமங்களா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். சடலத்தைக் கைப்பற்றிய நிலமங்களா காவல்துறையினர், உடற்கூறாய்வுக்குப் பிறகு உள்ளூரிலேயே புதைத்துவிட்டனர். 

 

இதையடுத்து ரமேஷ் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட சேகர் (வயது 30), அவருடைய கூட்டாளி நொள்ளையன் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 30) ஆகிய இருவரையும் தாரமங்கலம் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். சேகரின் அக்காள் மகன்கள் இருவரையும் தேடிவருகின்றனர். 

 

மேலும், இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறையினர் நிலமங்களா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, சடலத்தை உடற்கூறாய்வு செய்த அறிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலமங்களா காவல்துறையினரும், அங்கு சடலத்தைக் கைப்பற்றிய வழக்கை, தாரமங்கலத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.