![Rural Local Election - Final Candidate List Released!](http://image.nakkheeran.in/cdn/farfuture/_9XXIgopXsiutn-hep_0vKLjbJUBi4ojWz8_PUvcaTk/1632662538/sites/default/files/inline-images/s2_21.jpg)
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9- ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று (26/09/2021) மாலை வெளியிட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சாதாரண தேர்தலுக்கான அறிவிப்பு 13/09/2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்தல் அறிவிக்கப்பட்ட 27,003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீதமுள்ள 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,166 வேட்பு மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின் நிராகரிக்கப்பட்டன. 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்." இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.