Skip to main content

1.26 கோடி ரூபாய் நிலத்திற்காக விவசாயி கொலை! சாராய வியாபாரி உட்பட 2 பேர் கைது! 

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
சுப்ரமணி

 

ஆத்தூர் அருகே, வாரிசு இல்லாத சொத்தை அபகரிக்கும் திட்டத்துடன் விவசாயியை அடித்துக் கொலை செய்த வழக்கில் மூளையாக செயல்பட்ட சாராய வியாபாரி உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

நாமக்கல் மாவட்டம், அரியாக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்ரமணி (74). விவசாயியான இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக ஒரு வீட்டில் வசித்துவந்தார். இவருக்கு சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரில் சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை, உள்ளூரைச் சேர்ந்த சாராய வியாபாரி பெருமாள் (55) என்பவருக்கு 1.26 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக பெருமாள் அவருக்கு 10 லட்சம் ரூபாய் முன்பணமும் கொடுத்திருந்தார். 

 

இந்த ஒப்பந்தம் நடந்த சில நாள்களில், அதாவது கடந்த மார்ச் 23ஆம் தேதி விவசாயி சுப்ரமணி திடீரென்று மாயமானார். நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த கனகம் என்பவர், தன்னுடைய உறவினர் சுப்ரமணியை காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்து தருமாறும் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். 

 

உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தினர் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்தனர். முதற்கட்ட விசாரணையில் சுப்ரமணி காணாமல் போனது ஆத்தூர் சரகத்திற்குள் வந்ததால், இந்த வழக்கின் தொடர் விசாரணையை ஆத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுப்ரமணிக்கு குடும்பமோ, நேரடி வாரிசுகளோ இல்லாததை அறிந்த சாராய விபாயாரி பெருமாள், அவரிடம் கொடுத்த 10 லட்சம் ரூபாய் முன்பணத்தையும் பறித்துக்கொண்டு, வாரிசு இல்லாத சொத்தை முற்றிலும் அபகரிக்கும் நோக்கில் அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
பெருமாள்

 

தன்னுடைய திட்டத்திற்கு உள்ளூரைச் சேர்ந்த ராமதாஸ் (27), அறிவழகன், சக்திவேல், 19 வயது வாலிபர் உள்பட 6 பேரை ஈடுபடுத்தியுள்ளார். இவர்கள் அனைவரும் சுப்ரமணியை கொலை செய்து, சிவகங்காபுரத்தைச் சேர்ந்த விவசாயி சக்திவேலின் கரும்பு தோட்டத்தில் அவரின் சடலத்தைப் புதைத்துவிட்டதும் தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக ராமதாஸ், அறிவழகன் மற்றும் 19 வயது சிறுவன் ஆகிய மூவரையும் முதற்கட்டமாக ஆத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

ராமதாஸ், அறிவழகன் ஆகியோரை சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்று அந்த இடத்தைக் காட்டும்படி கூறினர். ஆனால் அவர்கள் கூறிய இடத்தில் சடலம் ஏதும் கிடைக்கவில்லை. மூன்று நாட்களாக தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டிப் பார்த்தும் சடலம் புதைக்கப்பட்ட இடம் சரியாக தெரியவில்லை. இதையடுத்து பிடிபட்ட மூவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, தலைமறைவாக இருந்த பெருமாள், சக்திவேல், நரசிங்கபுரம் தினேஷ், ஓலப்பாடியைச் சேர்ந்த முஸ்தபா ஆகியோரை காவல்துறையினர் தேடிவந்தனர். 

 

இவர்களில் தினேஷ், ஆத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ரங்கராஜன் முன்னிலையிலும், முஸ்தபா ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் ரஜினிகாந்த் முன்னிலையிலும் டிச. 5ஆம் தேதி மாலையில் சரணடைந்தனர். ஏற்கனவே கைதானவர்களில் ராமதாஸ், அறிவழகன் ஆகிய இருவரையும் இரண்டு நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். சரணடைந்தவர்களுள் ஒருவரான முஸ்தபாவையும், சடலம் புதைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அப்போதும் சுப்ரமணியின் சடலமோ அவருடைய எலும்புகளோ கிடைக்கவில்லை. 

 

 Rs 1.26 crore land farmer case 2 arrested including liquor dealer
சக்திவேல்

 

இந்நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சாராய வியாபாரி பெருமாள், சக்திவேல் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரணடைவதற்காக சேலத்தில் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல்துறையினர் ரகசிய இடத்தில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் டிச. 5ஆம் தேதி இரவு கைது செய்தனர். அவர்களையும், திங்கள்கிழமை (டிச. 6) காலையில் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

 

இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால் காவல்துறையினர் குழப்பமடைந்தனர். சடலம் புதைக்கப்பட்டு 8 மாதங்களுக்கு மேலான நிலையில், அதன் எலும்புத்துண்டுகள் கூட கிடைக்காதது தொடர்ந்து மர்மமாக இருக்கிறது. உண்மையில், சடலத்தை அவர்கள் சக்திவேலின் தோட்டத்தில்தான் புதைத்தார்களா அல்லது வேறு எங்காவது புதைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 

 

விவசாயி சுப்ரமணி கொலை சம்பவம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் 4 இடங்களில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Rs 9 lakh confiscated at 4 places in Trichy

தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க திருச்சி மாவட்டத்தில் 81 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர நிலையான கண்காணிப்பு குழுவும் 14 சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் பறக்கும் படை அதிகாரி வினோத் குமார் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. கீரிப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த தொகையை எடுத்து சென்றுள்ளார். அதைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரூ. 3 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் மணச்சநல்லூர் தாசில்தாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதேபோன்று மன்னார்புரம் பஸ் நிறுத்தத்தில் ஒருவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணமானது பறக்கும் படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு திருச்சி மேற்கு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் கத்தரிக்காய் சாலையில் பிரபு தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் லால்குடியில் இருந்து குமுலூர் நோக்கி தனது காரில் 50 ஆயிரத்து 500 பணத்தினை உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற போது பிடித்தனர். அதனைத் தொடர்ந்து லால்குடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் தாசில்தார் முருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பறக்கும் படைத்தலைவர் பிரபு ஒப்படைத்தார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் வெங்கங்குடி பேருந்து நிறுத்தம் அருகே, காரில் சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் மொத்த விற்பனை செய்யும், மண்ணச்சநல்லூர் ராஜாஜி நகரை சேர்ந்த மூக்கன் (வயது 48) என்பவரிடமிருந்து 4,50,000 ரூபாய் ஆவணங்கள் இல்லாத ரொக்கப் பணத்தை பறக்கும் படை அதிகாரி சித்ராதேவி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Next Story

‘எனக்கு பிடித்த சேனல்தான் வைக்க வேண்டும்’ - சிறை வார்டன்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 rowdy smashed CCTV cameras in Cuddalore Central Jail

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை  கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பிரபல ரவுடி  எண்ணூர் தனசேகரன் இந்த சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக உதவி ஜெயிலரை, அவரது வீட்டில் சிறைக் காவலர் உதவியுடன், ரவுடி  எண்ணூர் தனசேகரன் பெட்ரோல் குண்டு வீசி  எரிக்க முயற்சி செய்தார். 

இவர் மீது இது குறித்து கடலூர் முத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி எண்ணூர் தனசேகரன் பலமுறை சிறை அதிகாரிகளை கண்டித்து போராட்டங்கள் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடலூர் மத்திய சிறைச்சாலையில் இரவு கைதிகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது  ரவுடி எண்ணூர் தனசேகரன் தனக்கு பிடித்த சேனலை வைக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மேலும் திடீரென்று சிறை வளாகத்தில் இருந்த சிசிடிவி. கேமராக்களை உடைத்துள்ளார். இது குறித்து கடலூர் முத்துநகர் காவல் நிலையத்தில் சிறைத்துறை அதிகாரிகள்  புகார் அளித்தனர். அதில் எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி. கேமராக்களை உடைத்ததாகவும், சிறை வார்டன்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இதனை கண்டித்து பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறை வளாகத்தில் நேற்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.