அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூரில் தனியார் ஏடிஎம் மையத்தில் இயந்திரத்துடன் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை பணம் எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர், ஏடிஎம் மையத்தில் இயந்திரம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அங்கு சிசிடிவி கேமரா உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருந்ததையடுத்து மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை உணர்ந்த அவர், காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு இன்னும் சில தினங்களில் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.