Skip to main content

அரிசி உற்பத்தி: மூட்டை மூட்டையாய்ப் புளுகும் அதிமுக அரசு! - மு.க.ஸ்டாலின்

Published on 21/06/2018 | Edited on 21/06/2018


தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தரும் புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைதானா என்ற பலத்த சந்தேகம் பல தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தந்துள்ள புள்ளி விவரத்திற்கும், "ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா" வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையிலான பெருமளவு வேறுபாடுகள் தான். இதனை இன்றைய ஆங்கில நாளேடு ஒன்று தெளிவாகச் சுட்டிக்காட்டி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெல் விளைச்சலில் ‘பம்பர் அறுவடை’ நடந்ததாக ஜெயலலிதா தலைமையிலிருந்த அ.தி.மு.க. அரசு ஊரெங்கும் தம்பட்டம் அடித்துக்கொண்டது. அதன் புள்ளி விவரப்படி, 2013-14ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகும். அதுபோல 2014-15ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் என தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது.

 

 

அதே நேரத்தில், இந்த இரண்டு ஆண்டு காலத்திற்கான அரிசி உற்பத்தி குறித்து, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா மே 2018ல் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தொடர்பான கையேட்டில் 2013-14ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள்தான் என்றும், 2014-15ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள்தான் என்றும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பார்க்கும்போது, 2013-14ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 18 லட்சம் டன்களும், 2014-15ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 22 லட்சம் டன்கள் அளவுக்கும் தமிழ்நாடு அரசின் புள்ளி விவரம் செயற்கையாக உயர்த்திக் காட்டியிருப்பது தெரியவருகிறது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தனது கையேட்டில் தகவல்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவிக்கின்ற நிலையில், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தந்துள்ள புள்ளிவிவரங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறிக்குள்ளாகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க ஆட்சியில் அதன் பிற்போக்குத்தனமான அணுகுமுறையினால், விவசாயிகளின் தற்கொலையும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அரிசி உற்பத்தியில் ‘பம்பர் சாதனை’ படைத்ததாகக் காட்டிக்கொண்டு, உண்மையை மறைக்க இப்படி இட்டுக்கட்டி பொய்யான புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வழங்குகிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றங்கள் வரை சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை. சில தருணங்களில், நீதிமன்றத்திலேயே திசைதிருப்பக்கூடிய வகையில் தவறான புள்ளிவிவரங்களை அளித்து குட்டுப்பட்டதுடன், அதன் காரணமாக தமிழகத்தின் உரிமைகள் பறிபோனதும் உண்டு. முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனப் பல முறை வலியுறுத்தியபோதும், எந்த ஒரு துறை சார்பாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை. அதற்கு மாறாக, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தருகின்ற கருப்புப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரிசி உற்பத்தி போல, மூட்டை மூட்டையாகப் பொய் சொல்லும் வகையில்தான் அமைந்துள்ளனவோ? மக்களை ஏமாற்றுவதற்காகவே புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வெளியிடுகிறார்களோ?

ஜனநாயக மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், தங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களிடம் பொய்யையும் புரட்டையும் புளுகையும் காட்டி, இதுபோல தொடர்ந்து ஏமாற்ற நினைத்தால், அந்த மக்களே சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என எச்சரிப்பதுடன், அரிசி உற்பத்தி தொடர்பான முழுமையான உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Chief Minister honors Anna - kalaignar Memorial

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. இதனையொட்டி நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் நேற்று (17.04.2024) மாலை 4 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் பரப்புரை ஓய்ந்ததால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.