Skip to main content

விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம்: ராமதாஸ் கண்டனம்

Published on 07/12/2018 | Edited on 07/12/2018
vijayabaskar



காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில்  இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நீக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 குட்கா ஊழல் வழக்கின் விசாரணைக்காக நேரில் முன்னிலையாகும்படி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தரகர் சரவணன் ஆகியோருக்கு மத்தியப் புலனாய்வுப் பிரிவு அழைப்பாணை அனுப்பியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தரகர் சரவணன் நாளையும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றொரு நாளும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தமிழகத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரது தரகருக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை கையூட்டு வாங்கிக் கொண்டு விற்பனை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் இளைஞர் சமுதாயத்திற்கு அமைச்சர் விஜயபாஸ்கரும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் செய்த தீமையும், துரோகமும் மன்னிக்கப்படக் கூடாதவை. சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய வேண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டவிரோதமாக குட்கா போதைப் பாக்குகளை விற்பனை செய்ய அனுமதித்ததன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களை போதைப் பாக்கு பழக்கத்திற்கு அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக சிதைத்துள்ளார்.
 

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அனுப்பி வைத்துள்ளது. இது நடந்து ஈராண்டு ஆன பிறகும் ஊழல் அமைச்சர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதிலிருந்தே தமிழகத்தில் எவ்வளவு தூய்மையான ஆட்சி நடைபெறுகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
 

சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான வருமானவரித்துறை அறிக்கையின் அடிப்படையில் 2016&ஆம் ஆண்டில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த அசோக்குமார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க முயன்றார். ஆனால், அந்த ஒரே காரணத்திற்காக அவரை விருப்ப ஓய்வில் செல்லும்படி அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார். குட்கா ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஜெயலலிதா தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரும்  ஒரே மாதிரியான அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டாக வாங்கிய பணம் அவருடன் மற்றும் நின்றுவிடவில்லை; அதிகாரப் படிக்கட்டுகளின் உச்சத்தில் இருந்தோர், இப்போது இருப்போர் வரை பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பது தான் இதற்கெல்லாம் காரணமாகும்.
 

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது  வீட்டில் வருமானவரித்துறையும், சிபி.ஐயும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளன. இப்போது விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அழைப்பாணையும் அனுப்பியுள்ளது.  இதற்குப் பிறகும் விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறை தானா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு இது கேட்டிருக்க வாய்ப்பில்லை.
 

காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள  விஜயபாஸ்கர் நீடிப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும். அவரை தமிழக அமைச்சரவையில்  இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நீக்க வேண்டும். விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட  குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றமிழைத்தோருக்கு சிபிஐ தண்டனை பெற்றுத்தர  வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீதிமன்றத்தில் புதிய மனு; விஜயபாஸ்கரின் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
ed Petition seeking details of case registered against Vijayabaskar by Anti-Corruption Department

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று முன் தினம் (21.4.2024)  விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் இன்று விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு  தாக்கல் செய்துள்ளனர்.  அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை காரணமாகவே விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீண்டும் அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை; விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறாரா அதிமுக வேட்பாளர்?

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
AIADMK candidates nominated by Vijayabaskar may also be questioned

மாஜி அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் இன்று காலை முதல் மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து 3 கார்களில் வந்துள்ள ஒரு பெண் அதிகாரி உள்பட 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் விஜயபாஸ்கரின் அப்பா மற்றும் அம்மா மட்டுமே இருப்பதால் இலுப்பூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குவிந்துள்ள அதிமுகவினர் வீட்டின் முன்னால் நிற்கின்றனர்.

பாஜகவின் அராஜக போக்கால் இப்படி நடப்பதாக கூறும் அவரது ஆதரவாளர்கள், தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் கூறி வருகின்றனர். மாலை வரை சோதனை தொடரும் என்ற நிலையில் ஒரு காரில் சிலர் வெளியில் சென்றுள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வெளியில் சென்ற அமலாக்கத்துறையினரின் கார் எங்கே சென்றுள்ளது என்று தேடி வருகின்றனர்.

மேலும் ஏற்கனவே ரைடுகளில் சிக்கி வெளியில் உள்ள கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் மாஃபியா கரிகாலனின் சகோதரர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மா.செ கருப்பையாவுடன் நெருக்கமாக உள்ள மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தார் என்பதும் இப்போது அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கமணியை ஓரம்கட்டிவிட்டு எடப்பாடியிடம் கடுமையாக மல்லுக்கட்டி பாசறை கருப்பையாவுக்கு சீட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதேபோல மேலும் சிலருக்கு சீட்டு கிடைக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் விஜயபாஸ்கரிடம் தொடர்பில் உள்ள திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பாசறை கருப்பையா மற்றும் அவரது தம்பி கரிகாலன் வீடு, மேலும் சில வேட்பாளர்கள் வீடுகளுக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலிருந்து சிக்னல் கிடைத்தால் ரைடு நிச்சயம் என்கின்றனர் துறை சார்ந்தவர்களே.