Skip to main content

கள்ளச் சந்தையில் ரெம்டெசிவர்.. வாங்கியவரே காட்டிக் கொடுத்தார்.. 

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

Remdesier Medicine at Black Market police caught two tuticorin


‘கோவிட் 19’ இரண்டாம் அலையின் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சைக்காகத் தேவைப்படுவது ரெம்டெசிவர் டோஸ். அது அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே கிடைப்பது சாத்தியம். அது தவிர்த்து தனியார் மருந்தகங்களுக்குச் சப்ளை கிடையாது. ஆனாலும் ரெம்டெசிவருக்குக் கடும் தட்டுப்பாடுதான். நோயாளிகளுக்கான ரெம்டெசிவரைப் பெறவேண்டுமானால் நோயாளிகளின் ஆதார், தொற்று சோதனைக்கான பாசிட்டிவ் ரிப்போர்ட், சி.டி.ஸ்கேன் அறிக்கை (மூச்சுத்திறன் பற்றியது) மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் ஆகியவைகளின் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் தொற்றாளர்களுக்குத் தரப்படுகிறது. அப்படியான டாக்குமெண்ட்களுடன் ரெம்டெசிவரைப் பெற நோயாளிகளின் உறவினர்கள், கூட்டம் கூட்டமாக அரசு மருத்துவமனைகளில் காத்துக்கிடக்கிற நிலை உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து டோக்கன் பெற்றால்தான் மறுநாள் ரெம்டெசிவர் கிடைக்கிற சூழல். ரெம்டெசிவருக்காக மக்கள் அலைபாய்வதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஆயிரம் ரூபாய் விலையுள்ள ரெம்டெசிவரை 20 ஆயிரம், 30 ஆயிரம் என்று கூசாமல் கொள்ளை விலையில் கள்ளச் சந்தையில் விற்கின்றனர். அரசும், காவல்துறையும் முடிந்தவரை கள்ளச்சந்தையில் விற்கிவர்களை வேட்டையாடி வருகிறது.

 

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள காம்ப்ளக்சின் மருந்துகளின் மொத்த விற்பனைக் கடையில் ரெம்டெசிவர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைக்குத் தகவல் போயிருக்கிறது. அதையடுத்து சுகாதாரத்துறையின் (பணிகள்) இயக்குனர், அனிதா, டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் அந்த மருந்துக் கடையில் அதிரடி சோதனை நடத்தியதில் 42 ரெம்டெசிவர் டோஸ்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததைக் கைப்பற்றியிருக்கிறார்கள். அதன் உரிமையாளர் சண்முகம் மற்றும் அவரின் சகோதரர் கணேசன் இருவரையும் கைது செய்த போலீசாரின் விசாரணையில், நெல்லை மற்றும் மதுரைப் பகுதிகளிலிருந்து 16 ஆயிரம் விலையில் வாங்கிவந்து குப்பி ஒன்று 20 ஆயிரம், 30 ஆயிரம் என டிமாண்ட்டைப் பொறுத்து விற்றது தெரிய வந்திருக்கிறது.

 

Remdesier Medicine at Black Market police caught two tuticorin

 

மேலும், இவர்களிடம் இந்த அளவு விலைகொடுத்து வாங்கிய பாதிக்கப்பட்ட நபர் ஒருவரே நடப்பதை அப்பட்டமாகப் போலீசுக்குத் தெரிவிக்க அதன் பின்னரே இந்த ரெய்ட் நடத்தப்பட்டுக் கைப்பற்றியதாகப் போலீஸ் ஸோர்சுகள் தெரிவிக்கின்றன.

 

கைப்பற்றப்பட்ட ரெம்டெசிவரைப் பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார், போலீசாரைப் பாராட்டியதுடன், இந்த ரெம்டெசிவர் வியாபாரம் சங்கிலித்தொடர் போன்று தெரிகிறது. அவர்கள் மதுரைப்பகுதியில் வாங்கியதை அங்குள்ள துறையினரிடம் தெரிவித்ததில் அங்கேயும் ரெம்டெசிவர் கைப்பற்றப்படுள்ளது. மேலும் நெல்லைப் பகுதியையும் கண்காணிக்க ஏற்பாடாகிறது. இனி ரெம்டெசிவர் கள்ளச் சந்தைக்காரர்களின் மீது குண்டர் சட்டம் பாயும் என்றார் கடுமையாக.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடி நிகழ்ச்சியின் அழைப்பிதழில் சர்ச்சை!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Controversy in Prime Minister Modi's program invitation

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கொங்கு பகுதியில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் கொங்கு பகுதியானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜவுளி துறையிலும் சிறந்து விளங்குகிறது. தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற பகுதியாக திருப்பூர் திகழ்கிறது. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்த கூட்டத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது.

தமிழ் மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளை கொண்டது. தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் என கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரையில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் நடைபெறும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன டிஜிட்டல் செயலாக்க கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் இடம் பெற்றுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயலாக்கத் திட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் பார்வையிட்டார். மேலும் மாணவ மாணவிகளுடனும் உரையாடினார். மாநாட்டில் உரையாற்றுகையில், “உலகளாவிய வாய்ப்புகள் நமது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கதவைத் தட்டுகின்றன. அதே சமயம் பல நாடுகளில் உற்பத்தியாகும் கார்கள், நம் சிறு - குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தயாரிக்கும் பாகங்களை கொண்டுள்ளன” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Controversy in Prime Minister Modi's program invitation

மேலும் நாளை (28.02.2024) காலை 8.40 மணிக்கு மதுரையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டு செல்லும் பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்திற்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழா அழைப்பிதழில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் சாந்தனு தாக்கூர், தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, கீதாஜீவன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் பெயர் இடம்பெறவில்லை. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரின் பெயர் அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் இடம் பெறாதது மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.