Skip to main content

லாரிகளுக்கு 'ஸ்பீடு கவர்னர்' கருவி பொருத்தும் விதிகளில் தளர்வு!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Relaxation of rules for fitting 'Speed ​​Governor' equipment to trucks!

 

சரக்கு லாரிகளில் ‘ஸ்பீடு கவர்னர்’ எனப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவில் தளர்வு அளிக்கப்பட்டு, 80 கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லக்கூடிய குறிப்பிட்ட ரக லாரிகளில் மட்டும் இத்தகைய கருவியைப் பொருத்துவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சரக்கு லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாடு பொருத்துவது கட்டாயம் என போக்குவரத்துத்துறை அறிவித்தது. இதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் அண்மையில் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், வேகக்கட்டுப்பாட்டுக் கருவிக்குச் சான்றிதழ் இருந்தால் போதும். 80 கி.மீ. வேகத்திற்குக் குறைவாக இயக்கப்படும் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி தேவையில்லை என சொல்லப்பட்டது. 

 

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகக்கட்டுப்பாட்டு கருவியை ஆன்லைனில் பதிவு செய்திருந்தால் மட்டுமே லாரிகளுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

அதிகாரிகளின் இந்த திடீர் கெடுபிடியால் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் தகுதிச் சான்றிதழ் பெறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் செயல்படுவதால் தகுதிச் சான்றிதழ் பெறுவதற்காக செல்லும் லாரிகளுக்கு, ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தகுதிச் சான்றிதழ் தர மறுப்பதால், அந்த வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.

 

இதையடுத்து, தற்போது 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் குறிப்பிட்ட சில ரக லாரிகள், தகுதிச் சான்றிதழ் பெற வரும்போது அவை மட்டுமாவது வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்தியிருக்க வேண்டும் என ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்குப் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. 

 

இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் கூறுகையில், ''லாரி ஸ்டிரைக்கின்போது போடப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் அதிகாரிகள் லாரிகளுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க மறுக்கின்றனர். இதைக் கண்டித்துப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

 

தற்போது 80 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும் குறிப்பிட்ட மாடல் லாரிகளுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற லாரிகளுக்கு தேவையில்லை எனக் கூறியுள்ளனர்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி; அதிகாலையில் நிகழ்ந்த விபத்து

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Overturned truck on tracks; An early morning accident

கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.