Skip to main content

வரதட்சணை கொடுமை... பெண் தற்கொலை... போலீஸ் விசாரணை..!

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

 the relatives who had gathered in front of the house screaming

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆனத்தூர் என்கிற ஊரைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மகள் அபிதாவுக்கும் (23), அதே பகுதியில் உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்திக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பெற்றோர்கள் பார்த்து பேசி திருமணம் நடத்தி வைத்துள்ளனர். திருமணம் நடந்த சில நாட்களிலிருந்தே தட்சிணாமூர்த்தி குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அபிதாவை கொடுமைப்படுத்திவந்துள்ளனர். கொடுமை தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார் அபிதா. அதன்பிறகு உறவினர்கள் தரப்பில் ஒன்றுகூடி அபிதாவை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கடந்த 21ஆம் தேதி ஆலம்பூண்டியிலுள்ள அவரது கணவர் தட்சிணாமூர்த்தி வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

 

இந்த நிலையில், மறுநாள் 22ஆம் தேதி தட்சிணாமூர்த்தி தந்தை ஆறுமுகம் அபிதாவின் தாயார் சம்பூர்ணத்திற்கு ஃபோன் செய்து, உனது மகள் அபிதா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சம்பூர்ணம் மற்றும் அவரது உறவினர்கள் அலறியடித்துக்கொண்டு ஆலம்பூண்டிக்கு விரைந்து சென்றனர். மகளின் உடலைப் பார்த்து கதறி அழுத அவர்கள், அபிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். அதேபோல் ஏற்கனவே வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்திவந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுவது சந்தேகமாக உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

 

மேலும், அபிதாவை கணவர் தட்சிணாமூர்த்தி, மாமனார் ஆறுமுகம், கணவரது அக்கா முத்துலட்சுமி, மாமியார் மல்லிகா, கணவரது சகோதரி பாக்கியலட்சுமி, மாமனாரின் அண்ணன் முருகன் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று கூறி அபிதாவின் தந்தை சம்பூரணம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து அபிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அபிதாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வது கால தாமதம் ஆகியுள்ளது.

 

இதனால் பெண்ணின் உறவினர்கள் ஆத்திரமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட அபிதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து திண்டிவனம் சார் ஆட்சியர் அமித் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திய பின்னர், மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். இதனால் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.