Skip to main content

“ஏட்டிக்கு போட்டி அரசியல் கூடாது..” ஓமந்தூரார் அரசு மருத்துவமனை விவகாரத்தில் ராமதாஸ் வலியுறுத்தல்..! 

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Ramadoss condemn for Omanthurar Hospital issue

 

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சமீபத்தில், கிண்டியில் ரூ. 250 கோடி மதிப்பில் பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இயங்கிவரும் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துமனையை மாற்றம் செய்துவிட்டு, அதனை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்போகிறது என தகவல்கள் வெளியாகி, அது ஒரு விவாதமாக நடந்துவருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை தலைமைச் செயலகமாக மாற்றும் திட்டமிருந்தால் அதனைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையில் அவர், “சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையை அங்கிருந்து இடமாற்றம் செய்துவிட்டு, அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை செயலகமாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. இந்தச் செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என்று தமிழக மக்களைப் போல நானும் விரும்புகிறேன்.

 

ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டுவரும் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கின்றனர். இப்போது சுமார் 500 மாணவர்கள் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்துவருகின்றனர். இந்த வளாகத்திலிருந்து மருத்துவமனை மாற்றப்பட்டால்  மருத்துவக் கல்லூரியை மூடும் நிலை உருவாகும். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

 

ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையை திமுக அரசு இடமாற்றம் செய்யாது என்ற நம்பிக்கையை தமிழக முதலமைச்சரும், மருத்துவத் துறை அமைச்சரும் வெளியிட்ட இரு அறிவிப்புகள் தகர்த்துவிட்டன. சென்னை கிண்டியில் ரூ. 250 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை கட்டப்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, ஓமந்துரார் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் சட்டப்பேரவை கூட்ட அரங்கு, அமைச்சர்களுக்கான அறைகள், தலைமைச் செயலகத்திற்கான அலுவலகங்கள் போன்றவை பயன்படுத்தப்படாமல் கிடப்பதாகவும் அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கான திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என்று தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு ஆகியவைதான் ஓமந்தூரார் வளாகம் மீண்டும் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகமாக மாற்றப்படுமோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த வளாகம் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டால், அது நாகரிகமான அரசியலாகவும் இருக்காது; மக்களுக்கு நலன் பயக்கும் அரசியலாகவும் இருக்காது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவை செயலகமும் போதிய இடவசதியுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்பாக வடிவமைத்து உருவாக்கப்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை. கடந்த 2011ஆம் ஆண்டு ஓமந்தூரார் வளாகத்தில் இருந்த தலைமைச் செயலகக் கட்டடம் அரசு மருத்துவமனையாக்கப்படும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபோது அதற்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது கலைஞரோ, மு.க. ஸ்டாலினோ அல்ல.... இந்த இராமதாசுதான். அப்போதைய அரசு செய்தது மிகப்பெரிய தவறுதான். ஆனால், பல நூறு கோடி மக்கள் வரிப்பணத்தில் அது மிகச்சிறந்த மருத்துவமனையாக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை அகற்றிவிட்டு, அங்கு மீண்டும் தலைமைச் செயலகத்தை அமைப்போம் என்பது அது முந்தைய அரசு செய்ததைவிட பெரும் தவறாக அமைந்துவிடும். அத்தகைய ஏட்டிக்கு போட்டி அரசியல் கூடாது.

 

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையில் இப்போது 14 துறைகள் சிறப்பாக இயங்கிவருகின்றன. புற்றுநோய், கதிரியக்க மருத்துவம், முட நீக்கியல், சிறுநீரகவியல், இதயநோய்ப் பிரிவு, பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் தலைசிறந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைவிட தரமான சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. தென்னிந்திய அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ரோபாட்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான கருவிகளை அமெரிக்காவில் இருந்து வாங்க ரூ. 35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, எந்த நேரமும் அந்தக் கருவிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 7 துறைகளைத் தொடங்க அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அவையும் தொடங்கப்பட்டால் நாட்டின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக ஓமந்தூரார் மருத்துவமனை உயரும். இத்தகைய சிறப்பு மிக்க மருத்துவமனை தமிழ்நாட்டில் உருவாவதை சீரழிக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபடக் கூடாது.

 

தமிழக அரசு அறிவித்திருப்பதைப் போன்று கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ. 250 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை அமைப்பது சாத்தியமல்ல. ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அங்கு கொண்டு சென்று புதிய மருத்துவமனையை உருவாக்குவதற்குத்தான் அரசு முயல்வதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணாகுமே தவிர எந்த பயனும் ஏற்படாது. இதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

 

கரோனா தாக்குதலால் பொருளாதார அடிப்படையிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஏழை - நடுத்தர மக்களில் பல்லாயிரக்கணக்கானோருக்கு  உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. அவர்களால் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவம் பெற முடியாது எனும் சூழலில் இந்த மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.

 

தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் கூறியிருப்பதைப் போன்று ஓமந்தூரார் வளாகத்தில்  உள்ள கட்டடங்களில் எந்த இடமும் காலியாக இருப்பதாகத் தெரியவில்லை. அங்குள்ள கட்டடங்களின் ஒரு பகுதியில் பன்னோக்கு மருத்துவமனையும், மற்றொரு பகுதியில் மருத்துவக் கல்லூரியும் இயங்கிவருகின்றன. பன்னோக்கு மருத்துவமனையில் புதிய பிரிவுகள் தொடங்கப்படும்போது கூடுதல் இட வசதி தேவைப்படும். ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை புகழ்பெற்ற அரசு மருத்துவ நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அதை தில்லி எய்ம்ஸ்க்கு இணையாக தரம் உயர்த்துவதற்குதான் அரசு முயல வேண்டும்.

 

எனவே, ஓமந்தூரார் வளாகத்தில் இப்போதுள்ள மருத்துவமனையை அகற்றிவிட்டு, அதை சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகமாக மாற்றும் திட்டமிருந்தால் அதைக் கைவிட வேண்டும். ஓமந்தூரார் மருத்துவமனை இப்போதிருக்கும் இடத்தில் இப்போதுள்ள நிலையில் நீடிக்கும்; அங்கு தலைமைச் செயலகம் வராது என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் - சட்டப்பேரவை வளாகம் தேவை என்றால் அவற்றை அமைக்க மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.