Skip to main content

தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் திடீர் சோதனை!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

DMK , ADMK LEADERS HOMES RAID FLYIND SQUAD TEAM

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பணிகளில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பல சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவினர் ஒரு வாக்காளருக்கு ஆயிரம் ரூபாயும், சில சட்டமன்றத் தொகுதிகளில் ஐநூறு ரூபாயும் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் விராலிமலை, ஒரத்தநாடு போன்ற முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ரூபாய் 2000 வரை வழங்கி வருவதாகக் கூறுகிறார்கள். மேலும், திமுக வேட்பாளர்கள் சராசரியாக தலா ரூபாய் 500 வரை கொடுப்பதாக தகவல் கூறுகின்றனர். 

 

நேற்று (02/04/2021) கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாமலை பகுதியில், அதிமுகவினர் பணத்துடன் கூடிய கவர்களை வழங்குவதாக வந்த தகவலையடுத்து, பறக்கும் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்களைப் பார்த்த அதிமுகவினர் கவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அந்தக் கவர்களைக் கைப்பற்றிப் பார்த்தபோது, ஒவ்வொரு கவரிலும் ரூ.1000, 2000, 3000 என மொத்தம் ரூபாய் 41,000 வரை இருந்துள்ளதைப் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

DMK , ADMK LEADERS HOMES RAID FLYIND SQUAD TEAM

 

இதேபோல மாவட்டம் முழுவதும் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல்கள் வர, மாவட்ட அதிகாரிகளின் உத்தரவில், இன்று (03/04/2021) காலை திருமயம் தொகுதியில் உள்ள வி.கோட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராமதிலகம் (திமுக) வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளனர். அதேபோல, ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து நேற்று (02/04/2021) இரவு அரயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் பணம் வாங்கிச் சென்றதாக அவர்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய பட்டியல் கிடைத்ததால், அந்த ஏழு பேர் வீடுகளிலும் ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான காவல்துறையினரின் பாதுகாப்புடன் பறக்கும் படை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இருப்பினும் யார் வீட்டிலும் பணம் சிக்கவில்லை. இதேபோல தொடர்ந்து சோதனைகள் நடந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.