Skip to main content

காலங்காலமாய் சிற்பங்களை பொக்கிஷமாய் காவல் காக்கும் கிராமத்தினர்!

Published on 21/07/2021 | Edited on 21/07/2021

 

pudukkottai district temple security work for the peoples

 

காலங்கள் மாற மாற கலாச்சாரங்களும் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் பல இடங்களில் மரபுகளை மாற்ற முடியாது என்று வாழையடி வாழையாக சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளன. அப்படி ஒரு மரபு மாறாத நிகழ்வு குடுமியான்மலையில் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு மேற்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது குடுமியான்மலை. தொடக்கத்தில் குன்றியூர், திருநக்குன்று என்றும் இருந்த ஊர் பிறகு குடுமியான்மலையானது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க அகிலாண்டேஸ்வரி உடனுறை சிகாகிரீஸ்வரர் கோயில் உள்ளது. முற்காலப் பாண்டியர்களால் அவர்களுக்கே உரித்தான சதுர வடிவ ஆவுடையுடன் பிரமாண்ட லிங்கத்தை மலையில் குடைந்து அமைத்திருக்கிறார்கள். பிறகு வந்த முத்தரையர்கள், கொடும்பாளூர் வேளிர் மருமகள் (முத்தரையர் மகள்), குலோத்துங்கன், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை வானர்கள், வானதிரையர்கள், நாயக்கர்கள், தொண்டைமான்கள் எனப் பலரும் திருப்பணிகள் செய்ததாகக் கல்வெட்டுகளும் உள்ளது. தொண்டைமான் மன்னர்கள் முடிசூடும் இடமாகவும் இது இருந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், இசை மண்டபம் எனப் பல கலைப் பொக்கிஷங்கள் உள்ளன.

 

pudukkottai district temple security work for the peoples

 

பிற்காலத்தில் படையெடுப்பில் அழகிய சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன. மலையின் அடியில் குடைவரைக் கோயிலை ஒட்டி மலையிலேயே விநாயகர் சிற்பம் பொறிக்கப்பட்டு, அதன் அருகில் இசை மொழி (கிரந்தம்) கல்வெட்டுகளும் உள்ளன. இப்படி பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த தளத்திற்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகையோ மிகக் குறைவாகவே உள்ளது.

 

இத்தனை சிறப்பு மிக்க கலைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்க உருவம்பட்டி, காட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளனர். ஒரு நாளைக்கு 12 பேர் வீதம் இரவு பகலாக மெய்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இவர்களுக்கு விவசாய நிலம் கொடுத்திருக்கிறார்கள். பிறகு மாதம் ரூ.100 சம்பளம் தான். பல வருடங்களாக இது தான் சம்பளம்.

 

pudukkottai district temple security work for the peoples

 

இது குறித்து காவல் பணியிலிருந்தவர்கள் கூறும் போது, "எங்கள் முன்னோர்கள் பாதுகாத்த இந்த பொக்கிஷங்களை இப்போது நாங்கள் காவல் காக்கிறோம். எங்களுக்கு பிறகு எங்கள் பிள்ளைகள் காவல் பணி செய்வார்கள். இரவில் 12 பேரும் கம்புகளோடு கோயில் முழுவதும் ஆங்காங்கே பணியில் இருப்போம். பகலில் நிர்வாகிகள் இருவர் பணி செய்வார்கள். எந்த வேலை என்றாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு காவல் பணிக்கு வந்துவிடுவோம். 

 

pudukkottai district temple security work for the peoples

 

ஆனால், இத்தனை பொக்கிஷங்களையும் காலங்காலமாய் பாதுகாக்கும் எங்களுக்கு பல வருடமாக ரூபாய் 100 தான்  சம்பளம். ஒரு நாள் செலவுக்குக் கூட பற்றாத சம்பளம் தான். ஆனால் கடவுள் பணி நமக்கு கிடைத்திருப்பதாக நினைத்து காவல் பணி செய்கிறோம். இனி மேலாவது எங்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.