
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் புதுச்சேரியில் செல்ஃபோன் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குளஞ்சாவடியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவர் ரிச்சர்ட். இவர் புதுச்சேரியில் உள்ள அவருடைய சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மொட்டை மாடியில் நின்று ரிச்சர்ட் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கிராமத்தில், தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மரமடக்கி என்ற கிராமத்தில் வசித்து வந்த தமிழ்ச்செல்வி என்ற அந்த பெண் மாட்டிற்கு புல் சேகரிக்கத் தோட்டத்திற்கு சென்றபோது அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்ட தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புல் சேகரிக்கச் சென்ற தமிழ்ச்செல்வி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது கணவர் தேடிச் சென்ற நிலையில், மனைவி மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.