டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஐந்து நாள் பயணமாக இன்று (02.08.2021) தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். சென்னை விமான நிலையத்திற்கு வரும் குடியரசுத் தலைவரைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வரவேற்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். இன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர், நாளை காலை விமானத்தில் கோவை செல்கிறார்.
கோவை சென்று சூலூர் விமானப் படை தளத்திலிருந்து உதகை செல்கிறார். உதகை ராஜ்பவனில் ஆகஸ்ட் 6ஆம் தேதிவரை ஓய்வெடுக்கும் குடியரசுத் தலைவர், ராணுவப் பயிற்சி கல்லூரியைப் பார்வையிடுகிறார். பின்னர், ஆகஸ்ட் 6ஆம் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, சென்னை முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.