Skip to main content

தனி ஆளாக கார் திருடனை விரட்டிப் பிடித்த காவலர்... வீரதீர செயலுக்கான விருதுக்கு பரிந்துரை!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டுவந்த இருவர் கார் ஓட்டுநரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு இருவர் காரை கடத்திக் கொண்டு சென்ற தகவல் வாக்கிடாக்கி மூலம் தமிழகம் முழுவதும் போலீசார் சொல்லி இருந்தனர்.  இந்த கடத்தல் நடந்த அடுத்த நாள் கார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மக்கள் அதிகம் கூடும் மணிக்கூண்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது மெடிக்கலில் நின்ற பிரசாத் என்ற காவலர் இமைப் பொழுதில் அந்த கார், காரின் பதிவு எண்ணைப் பார்த்தவுடன் அது கடத்தல் கார் என்பதை முடிவுசெய்து உடனே பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

 

தனது மோட்டார் சைக்கிளில் சென்று நிறுத்தச் சொல்லி சைகை காட்டியும் நிறுத்தாமல் காரை சென்றதால் பின்னாலேயே விரட்டிச் சென்ற போது காரை நிறுத்தி இருவர் வெவ்வேறு திசையில் ஓட, காவலர் பிரசாத்தும் ஒருவன் பின்னால் ஓடி எட்டிப் பிடிக்க முயன்று சாலையில் விழுந்து ரத்த காயமடைந்தும் தொடர்ந்து விரட்டிச் சென்று மதுரை வேலுப்பாண்டி என்பவனைப் பிடித்ததுடன் கடத்தல் கார், காரில் இருந்த ஆயுதங்கள், செல்போன்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

 

இந்த தகவல் அறிந்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உடனே பாராட்டி ஊக்கத் தொகை ரூ.25 ஆயிரம் அறிவித்ததுடன் காவலர் பிரசாத்துக்கு போனில் பாராட்டும் தெரிவித்தார். தஞ்சை எஸ்.பி ரவளிப் பிரியா கந்தபுனேனி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார். தொடர்ந்து பிரசாத்தின் சொந்த கிராமமான புனல்வாசல் கிராம மக்கள் உள்படப் பலரும் பாராட்டிவரும் நிலையில் சென்னை எஸ்.பி சரவணன் பரிசுப் பொருட்களை வழங்கி இருந்தார்.

 

இந்தநிலையில் தனி ஆளாக கார் திருடனையும், காரையும் பிடித்துக்கொடுத்த காவலர் பிரசாத்துக்குத் தமிழக அரசின் வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கத் தஞ்சை மாவட்ட எஸ்.பி ரவளிப்பிரியா கந்தபுனேனி பரிந்துரை செய்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.