Skip to main content

சேலம் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

SALEM PRISON

 

தமிழக சிறைகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து சிறைத்துறை நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. 


இரு மாதங்களுக்கு முன்பு சென்னை பு-ழல் சிறையில் முக்கிய கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து எல்இடி டிவி, செல்போன், சிம் கார்டுகள், ரேடியோ, மூட்டை மூட்டையாக பிரியாணி அரிசி, கஞ்சா, பான்பராக் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


அதைத் தொடர்ந்து மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புழல் சிறை சோதனை நடந்த பிறகு சேலம் மத்திய சிறையில் மட்டும் இரண்டு முறை திடீர் சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

 


இருப்பினும், தடை செய்யப்பட்ட பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக மீண்டும் மீண்டும் புகார்கள் வந்ததையடுத்து இன்று (நவ. 28, 2018) காலை மீண்டும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 


போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பழனியம்மாள் மற்றும் 35 போலீசார் காலை 6 மணி முதல் 7.40 மணி வரை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். 

 


கைதிகளின் அறைக்குள் உள்ள கழிப்பறை தொட்டி, சிறை வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி, சமையல்கூடம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். கைதிகளிடமும் சோதனை நடந்தது. ஆனாலும் இன்றைய சோதனையில் கஞ்சா, செல்போன், சிம் கார்டு உள்ளிட்ட எந்த ஒரு தடை செய்யப்பட்ட பொருள்களும் சிக்காததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

 


கடந்த அக். 28ம் தேதியன்று நடந்த இரண்டாம் கட்ட சோதனையின்போதும், சேலம் சிறைக்குள் இருந்து தடை செய்யப்பட்ட பொருள்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை. போலீசார் சோதனைக்கு வருவதை யாராவது முன்கூட்டியே தகவல் சொல்கிறார்களா? அல்லது அலைக்கழிக்கும் நோக்கத்துடன் தடை செய்யப்பட்ட பொருள்கள் புழங்கப்படுவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.