Skip to main content

போலி மருத்துவர்கள் மீது வழக்கு மற்றும் கைது...

Published on 02/12/2020 | Edited on 02/12/2020

 

Police arrested fake doctors kallakurichi district

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கூவாகம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், தமிழ்ச்செல்வி மூன்றாவது முறையாக கருத்தரித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் மூன்றாவது குழந்தை வேண்டாம் என்று கருதி திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் உள்ள மருத்துவர்கள் ஸ்டீபன் அவரது மனைவி சத்திய ராணி ஆகியோரிடம் சென்று தமிழ்ச்செல்விக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். 

 

ஆனால் மேற்படி இருவரும், முறையாக மருத்துவம் படிக்காமல், போதிய பயிற்சி இல்லாமல் தவறாக மருத்துவம் செய்துள்ளனர். இதனால் தமிழ்ச்செல்விக்கு கருக்கலைப்பு செய்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கர்ப்பப்பையை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டீபன், சத்திய ராணி ஆகியோரை குமரேசன் சந்தித்து தவறான சிகிச்சை அளித்தது குறித்து விசாரணை செய்துள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் குமரேசனை மிரட்டியுள்ளனர். அப்போதுதான், அவர்கள் போலி மருத்துவர்கள் என்பது தெரியவந்தள்ளது. 

 

இதை தொடர்ந்து குமரேசன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் போலி மருத்துவர்களான கணவன் மனைவி இருவர் மீதும் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன், வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த போலி மருத்துவர்களான கணவன் மனைவி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

 

அடுத்து, ரிஷிவந்தியம் அருகே உள்ள பகண்டை கூட்டு சாலையில் உள்ளது லா.கூடலூர். இந்த ஊரில் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், சங்கராபுரம் வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்வதற்கு சென்றிருந்தனர். அப்போது இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த முருகேசன் என்பவரது கூரை வீட்டை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அங்கு கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் ஒரு மூதாட்டிக்கு ஆங்கில மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

 

அதைக்கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம்  விசாரணை செய்தனர். அவர், 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு,  கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு மருந்தகம் வைத்து அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து ஆங்கில மருத்துவமும் பார்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலருக்கு அதிகாரிகள் தகவல் அளித்தனர்.  

 

வட்டார மருத்துவ அலுவலர் ஜெயபால் பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை அடுத்து போலி மருத்துவர் இளையராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் வைத்திருந்த மருந்தகத்திற்கும் சீல் வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.