Skip to main content

பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர்!

Published on 30/11/2021 | Edited on 30/11/2021

 

Police arrest woman involved in money laundering

 

விழுப்புரம் நகரில் உள்ள சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவர் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், விழுப்புரம் அருகே உள்ள ஆரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் - கோமதி தம்பதி. இவர்கள் விழுப்புரம் நகரில் உள்ள பிரியதர்ஷனி நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டுமுதல் ஒரு லட்சம் மற்றும் 2 லட்சம் என்று நகரில் உள்ள பலரிடம் பணம் வசூல் செய்து ஏலச்சீட்டு நடத்திவந்துள்ளார். சமீப காலங்களாக பணம் கொடுத்தவர்கள் ஏலச்சீட்டு நடத்தும்போது ஏலம் கேட்டுள்ளனர். அப்படி கேட்டவர்களுக்கு அவர் பணம் கொடுக்க வேண்டும்.

 

ஆனால் அவர்களுக்கான ஏலத்தொகை பணத்தைத் தராமல் அந்தப் பணத்திற்கான வட்டித் தொகையை மட்டும் மாதாமாதம் கொடுத்துவந்துள்ளார். 2019ஆம் ஆண்டு கோமதி லதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த அடிப்படையில் அவசர உதவிக்குப் பணம் தேவை என்று லதாவிடம் 5 லட்சம் பணம் கேட்டுள்ளார். லதாவும் தனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து கடன்பெற்று அதை கோமதியிடம் இரண்டு தவணைகளாக கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை லதா திருப்பிக் கேட்டபோது மூன்று லட்ச ரூபாய்க்கான காசோலை ஒன்றைக் கொடுத்துள்ளார் கோமதி. அந்தக் காசோலையை வங்கியில் செலுத்த லதா முனைந்தபோது வங்கியில் பணம் இல்லை, அதை வங்கியில் செலுத்த வேண்டாம். தான் நேரடியாகப் பணத்தைக் கொடுத்துவிடுவதாக கோமதி கூறியுள்ளார். ஆனால், அவர் கூறியவாறு இதுவரை லதாவிடம் பணத்தைத் தராமல் ஏமாற்றிவந்துள்ளார்.

 

மேலும் கோமதி, விழுப்புரம் நகரில் உள்ள பலரிடம் சீட்டு ஏலம் நடத்துவதற்காக வசூல் செய்த பணம் மட்டுமே சுமார் ஒரு கோடிவரை இருக்கும் என கூறப்படுகிறது. பணத்தைக் கொடுத்தவர்களுக்குத் திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் நான் கொடுத்த பணம் எனக்குத் திருப்பி கிடைக்க வேண்டும்’ என்று லதா புகாரில் தெரிவித்திருந்தார். இவரது புகார் மனு மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், கோமதி பண மோசடியில் ஈடுபட்டதை உறுதிசெய்தனர். இதையடுத்து, கோமதியை விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.