Skip to main content

புதுவையில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி... நீதிமன்றம் உத்தரவு!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Permission for New Year celebration with restrictions in Puduvai ... Court order!

 

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த வழக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை இல்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஒமிக்ரான், கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்துள்ளன. எனினும், புதுச்சேரியில் நிபந்தனைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட நண்பர்கள், குடும்பத்தினருடன், அங்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக, புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

இந்த நிலையில்,  ஜெகநாதன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "ஒமிக்ரான் காரணமாக, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் புதுச்சேரிக்கு படையெடுத்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இரண்டு பேருக்கு ஒமிக்ரான் நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, மற்ற மாநிலங்களைப் போல், புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

 

இந்த வழக்கை இன்று (29/12/2021) மதியம் அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வு அறிவித்த நிலையில் தற்பொழுது இந்த வழக்கில் சில உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை அதேவேளையில், இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை. பொது இடங்களில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பங்கேற்கக்கூடாது. தனி இடங்களில் பங்கேற்கலாம். டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுபான விற்பனைக்குத் தடை. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மதுபானக்கடை, பார்கள், விடுதிகள் என எந்த இடங்களிலும் மதுவிற்பனை கூடாது. பொதுஇடங்களில் மது அருந்தக்கூடாது. விடுதிகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தாங்கிக் கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டு வழக்கு ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.