Skip to main content

“சசிகலா பெயரை வைத்து கட்சிக்குள் நாடகமாடுகிறார் ஒபிஎஸ்..” புகழேந்தி 

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

"OPS is playing into the party under the name of Sasikala.." - Pugalendi

 

முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர்செல்வம் மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி  செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி, ஓ.பி.எஸ். மீது நான் தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கு 11.12.2021 டிசம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆர்வத்துடன் அத்தீர்ப்பிற்காகக் காத்துள்ளேன். சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அது அமையும். 

 

இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாகப் பேசுவதாக கூறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி இந்த விவகாரம் தொடர்பாக பேசுகின்றனர். இவர்கள் ஒருங்கிணைப்பாளரா என்பதற்கான வழக்கே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட முடியாது. அதிமுகவின் பொதுக்குழு கூடினால் அது  நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும். சசிகலா, போட்டி பொதுக்குழுவைக் கூட்ட வாயப்புள்ளது. 

 

தேர்தலில் தோற்று கட்சியே அசிங்கமாக இருக்கும் நிலையில் மா.செ கூட்டம் தேவையா? நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சீட்டு கேட்கும் மனநிலையிலேயே நிர்வாகிகள் இல்லை. கொள்ளை அடித்த முன்னாள் அமைச்சர்கள் வேண்டுமானால் அதிமுக சார்பில் போட்டியிடட்டும். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு சில இடங்களே அதிமுகவிற்கு கிடைக்கும். கோவை, சேலம் உட்பட ஒரு மாநகராட்சியும் அதிமுக வெல்லாது. நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெறும் தகுதியுடன், குறையற்ற ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். 

 

தஞ்சையில் மழை வெள்ளம் பாதித்த  பகுதியைப் பயந்து பயந்து இரவில் சென்று பார்வையிடுகிறார் எடப்பாடி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 90 விழுக்காடு பணத்தை எடப்பாடி பழனிசாமி கொள்ளை அடித்தார். ஊழலில் ஈடுபட்டவர்களை இன்னும் கைது செய்யவில்லை என திமுக மீது வருத்தம் உள்ளது. சசிகலா தங்களுக்கு முன்பாக ஆய்வு செய்துவிடுவாரோ என்ற பயத்தில் ஓபிஎஸ், எடப்பாடி பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். 

 

சசிகலாவை ஏற்றால் மட்டுமே கட்சி நிலைக்கும். சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் ஒப்புக் கொள்வார். நகர்ப்புற தேர்தலின் பிறகு கட்சிக்குள் புரட்சி வெடிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு பெரிதாக இல்லை.  கட்சிக்காக பேசுகிறேன். சசிகலாவை இருவரும் தேடிச் சென்று கட்சியில் இணைக்க வேண்டும். சசிகலாவை கட்சியில் இணைப்பது  தொடர்பாக ஓபிஎஸ் மனநிலை வானிலை போல அவ்வப்போது மாறும். சசிகலா பெயரை வைத்து கட்சிக்குள் நாடகமாடுகிறார் ஓபிஎஸ். 

 

சர்வாதிகாரம் செய்ததாக ராமதாசை கைது செய்தார் ஜெயலலிதா. ஆனால், அவருடன் கூட்டணி வைத்துள்ளனர் இன்று. சாதி பற்றி அறியாதவர் கே.பி.முனுசாமி. அவர் சாதி பேசியதால்தான் ஜெயலலிதாவால் சில காலம் வெளியேற்றப்பட்டார். கே.பி. முனுசாமி, சாதி தலைவர். பாமக தொடர்பாக அவர் ஒருபோதும் பேசமாட்டார். கட்சியில் தற்போது ஆட்சி மன்ற குழு கூடுவதே இல்லை.

 

நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்பே நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் நீக்கி வருவது போல, சசிகலாவும் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்களை நீக்க முடியும். அதிமுகவில்   செயல்படாத நிர்வாகிகளை நீக்க சசிகலாவுக்கும் உரிமை உண்டு. 700 விவசாயிகளின் சமாதியில் எழுதப்பட்டதுதான் வேளாண் சட்டம் வாபஸ் என்பது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.