Skip to main content

வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் குறித்து ஆன்லைன் கருத்தரங்கம்!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் குழுவினால் "உயிரி அறிவியல் ஆராய்ச்சியில் எதிர்கால வளர்ச்சி" என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர். ஆரோக்கியராஜ் செல்வராஜ் உயிரி அறிவியல் துறையில் இருக்கும் பாடப்பிரிவுகள், உயர்கல்வி வாய்ப்புகள், மேல்படிப்பிற்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை, தென்கொரியா நாட்டின் கல்வி மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். முனைவர். ஆரோக்கியராஜ் செல்வராஜ் திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் உரையாற்றியது சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்களின் சந்தேககங்களுக்கும் அவர் எளிமையாக விளக்கமளித்தார்.

 

மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி மாற்று வெளிநாடுகளில் உயர்கல்வி சார்ந்த தகவல்களை கொண்டுசேர்க்கும் "பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு  வழிகாட்டல் குழு"வை முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ் பாராட்டினார்.

 

குழுவின் ஒருங்கிணைப்பாளர் சிலம்பை ஏ.ஆர். விவேக் குழுவின் நோக்கத்தையும்  கல்வியின் முக்கியத்துவத்தையும் விளக்கிக்கூறினார்.  கலைவாணன் முத்தழிலன் தனது வரவேற்புரையில் குழுவின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியை முனைவர். சரவணன் கோவிந்தராஜூ தொகுத்து வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இது தான் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?'-ராமதாஸ் கண்டனம்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'This is the beauty that creates job opportunities?'- Ramadoss condemned

'தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரீசியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான  ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த  ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை  செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல்,  கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூக நீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக  வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி; மூவர் மீது வழக்குப்பதிவு

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

chennai municipal corporation fake job appointment letter related issue 

 

சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி பணி நியமன ஆணை வழங்கிய  மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி சுதா (வயது 40). இவர்களுடைய மகள் ஜோதி. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், அரசாங்கப் பணிக்காக முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் சுதா சேலம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரை அணுகி தனது மகளுக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், இது தொடர்பாக 3 சாலை பகுதியில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வரும் சின்னான் என்பவரை அணுகுமாறு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அதையடுத்து சுதா சின்னானை நேரில் சந்தித்து மகளுக்கு அரசு வேலை தொடர்பாகப் பேசினார். அப்போது அவரும் மாரமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த கவுதம் என்பவருக்கு தான் அப்போது இருந்த ஆளுங்கட்சியினருடனும் அதிகாரிகளுடனும் நெருங்கிய பழக்கம் இருக்கிறது. அவர்தான் அரசாங்க வேலை வாங்கித் தருவார் என்று கூறி அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

 

இதன் அடுத்தகட்டமாக சுதா கடந்த 2021ம் ஆண்டு சின்னான் நடத்தி வந்த நீட் பயிற்சி மைய அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு கவுதமும் இருந்தார். அப்போது சுதாவைப் போல் சேலம் மெய்யனூரைச் சேர்ந்த விஜயகுமார், இரும்பாலையைச் சேர்ந்த மேஜர் சுந்தர்ராஜன், அரக்கோணத்தைச் சேர்ந்த ஹரீஷ் நாகராஜ் ஆகியோரும் அரசாங்க வேலை பெறுவது தொடர்பாக சின்னானையும் கவுதமையும் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் கவுதமும் சின்னானும் சேர்ந்து, ''தங்களுக்கு தெரிந்த ஆட்கள் சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணிக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறார்கள். இதற்காக ஒவ்வொருவரும் தலா 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். பணம் கொடுத்தால் மூன்றே மாதத்தில் பணி நியமன ஆணை வீடு தேடி வரும்'' என்று தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிய சுதா உள்ளிட்ட நான்கு பேரும் அவர்கள் கேட்டபடியே தலா 10 லட்சம் ரூபாயை கொடுத்தனர்.

 

இதையடுத்து 2021ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சுதா உள்ளிட்ட 4 பேரின் வாட்ஸ்ஆப் எண்களுக்கும் அவர்கள் யாருக்கு வேலை கேட்டனரோ அவர்களின் பெயர்களில் பணி நியமன ஆணையை அனுப்பி வைத்தனர். தாங்கள் எதிர்பார்த்தபடியே அரசு வேலை கிடைத்து விட்டது என்ற ஆசையுடன் சுதாவின் மகள் மற்றும் பணம் கொடுத்த சிலரும் வாட்ஸ்ஆப்பில் வந்த பணி நியமன ஆணையுடன் சென்னைக்குக் கிளம்ப ஆயத்தம் ஆனார்கள்.

 

அப்போது கவுதமும் சின்னானும் அவர்களை திடீரென்று தொடர்பு கொண்டு கொரோனா பரவல் காரணமாக தற்போது பணி நியமனத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சியில் இருந்து அழைப்பு வரும்போது நேரில் சென்றால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் நால்வரும் பணி நியமன ஆணை குறித்து விசாரித்தனர். இதில், அவர்கள் அனுப்பி வைத்த பணி நியமன ஆணை கடிதங்கள் போலியானது என்பது தெரிய வந்தது. சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் சேர்ந்து கொண்டு கவுதம் போலியாக பணி நியமன ஆணைகளை தயாரித்துள்ளது தெரிய வந்தது.

 

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுதா உள்ளிட்ட நான்கு பேரும் இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் விஜயகுமாரியிடம் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராணி விசாரித்தபோது புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி 4 பேரிடம் 40 லட்சம் ரூபாய் சுருட்டியதோடு போலி பணி நியமன ஆணை வழங்கிய சின்னான், கவுதம், மகேஸ்வரி ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த புகார் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.