தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டிருக்கிறது. ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளால், இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யும் அவசர சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில், பணப் பரிமாற்றங்கள் இணையவழி மூலம் நடைபெறுவதை தடுக்கவும், ஆன்லைன் விளையாட்டை நடத்தும் நிறுவனப் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் வழிவகை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால், 5 ஆயிரம் அபராதம் மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேபோல், ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால், 2 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். பணம் வைத்து விளையாடுபவர்களின் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களைத் தடை செய்யவும், இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.