Skip to main content

காதல் விவகாரத்தில் டிவி மெக்கானிக் படுகொலை! 

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Love issue one passes away one arrested by police
                                                     ஆனந்தராஜ்

 

எட்டையபுரத்தில் காதல் விவகாரத்தில் புது மாப்பிள்ளை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை (20-10-2021) தனது கடையில் சூரிய ராகவன் (21) டி.வி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர், அவருடன் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கறிவெட்டும் கத்தியால் சூரிய ராகவனின் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

 

துள்ளத் துடிக்க தலைவேறு, உடல் வேறாக கிடந்த சூரிய ராகவனின் உயிர் சிறிதுநேரத்தில் அடங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே, அடுத்த சில மணி நேரத்தில், கொலைக் குற்றவாளி ஆனந்தராஜ் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 

விசாரணை நடத்திய போலீசாரிடம் நாம் பேசினோம், “இந்தப் பையனுக்கும், கொலையான சூர்ய ராகவனுக்கும் எந்த மோட்டிவும் கிடையாது. ஆனால், சூர்ய ராகவனின் மனைவியை இவர் முதலில் காதலித்திருக்கிறார். அந்தப் பொண்ணும் காதலித்ததாகச் சொல்றார். இதற்கிடையே, ஆனந்தராஜ் கத்தாருக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். அங்கு 3 மாசம்தான் இருந்திருக்கிறார். அப்புறம் அங்கிருந்து சொந்த ஊரான சோழபுரம் வந்திட்டார்.

 

இதற்கிடையே, இந்தப் பொண்ணு சூரிய ராகவனை காதலித்துவந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஆனந்தராஜ், ‘அவன் (சூரிய ராகவன்) நடத்தை சரியில்லாதவன். ஏற்கனவே 2 பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஏமாத்திட்டான். நீ 3வது ஆள், உன்னையும் அவன் ஏமாத்திடுவான்’ என தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பொண்ணு இவன் சொன்னதை நம்பாமல், சூரிய ராகவனையே திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனால், 2 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை என்பதால், சூரியராகவனை மட்டும் கொலை செய்திருக்கிறார்.” 

 

இவர் கொலை செய்வதாக இருந்தால், காதலித்து ஏமாற்றியதாகச் சொல்லப்படும் அந்தப் பெண்ணை அல்லவா கொலை செய்திருக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன்வைத்தோம்.

 

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், “2 பேரையும் கொலை செய்யவே திட்டமிட்டிருக்கிறார். ஆனால் அப்பெண் தப்பிவிட்டார் என்கிறார். கொலை செய்த உடனே, ரிலேஷன் ஒருவருக்கு ஃபோன் பண்ணி, 2 பேரையும் போட்டுத் தள்ளிட்டேன் என்று சொல்லியிருக்கிறார். சம்பவம் நடந்த உடனே வக்கீல் ஒருத்தர்கிட்ட கொலை விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகுதான், காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கார். ஒருவேளை சூரிய ராகவனை போட்டுத் தள்ளிட்டு, அப்பெண்ணை தன்வசப்படுத்திடலாம்னு இவர் பிளான் பண்ணியிருக்கலாம். அதுகுறித்தும் விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்