Skip to main content

இளைஞரை அடித்துக் கொன்ற முதலாளி!

Published on 20/05/2022 | Edited on 20/05/2022

 

one passed away in kallakurichi district police investigation

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள சிறுவள்ளூர் ஊரைச் சேர்ந்தவர் 30 வயது தீபன். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் என்பவரிடம் பொக்லைன் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். பொக்லைன் இயந்திரம் ஓட்டி சம்பாதிக்கும் பணம் சம்பந்தமாக தீபன் - அறிவழகன் இருவருக்கும் இடையில் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அறிவழகன், தீபனை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த தீபனை உறவினர்கள் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சை பலனின்றி நேற்று தீபன் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபனின் உறவினர்கள் சங்கராபுரம் நான்குமுனை சந்திப்பில் தீபன் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அப்போது தீபனை அடித்துக்கொலை செய்த அறிவழகன் உடனடியாக கைது செய்யக் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சங்கராபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தீபன் கொலை சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையின் உறுதி அளித்ததன் பேரில் தீபனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து தீபனின் மனைவி சல்மா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபன் கொலைக்கு காரணமான அறிவழகனை தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.