Skip to main content

கொட்டும் மழையில் ஒலிம்பியாட் பேரணி;குளிரில் நடுங்கிய பிள்ளைகள்! 

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Olympiad rally in pouring rain! Children shivering in the cold!

 

சர்வதேச 44வது ஒலிம்பியாட் செஸ் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் ஜுலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறும் இந்த நிகழ்வு, தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான முறையில் சிறப்பான ஏற்பாடுகளை தமிழக அரசும், விளையாட்டுத் துறையும் செய்து வருகின்றன. ஒலியம்பியாட் போட்டியை தமிழகம் முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளை கொண்டு கடந்த 10 தினங்களாக சதுரங்கப்போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

அதேபோல், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓலியம்பியாட் ஜோதி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பயணமாகின்றது. மாவட்டத் தலை நகரங்களில் அதை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையில் ஏந்தி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜுலை 26ம் தேதி காலை 8 மணிக்கு பள்ளி மாணவ – மாணவிகள், தன்னார்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் என 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டு ஒலியம்பியாட் ஜோதியை நகரத்தின் முக்கிய வீதிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கொண்டுவருவது என முடிவுசெய்தனர்.

 

இதற்காக விளையாட்டுத்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை என பலதுறைகளுக்கும் பேரணி செல்லும் பாதையில் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 100 மாணவர்கள், 100 மாணவிகளை அழைத்து வந்து பேரணி வரும் வழியில் நிறுத்தவேண்டும், அந்த இடத்தை கடக்கும்போது அங்கிருப்பவர்கள் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

 

Olympiad rally in pouring rain! Children shivering in the cold!

 

ஜுலை 25ம் தேதி நள்ளிரவு முதல் திருவண்ணாமலை நகரம் மட்டுமல்லாமல், மாவட்டம் முழுவதுமே பலத்த மழை. ஆரணி பகுதியில் 20 செ.மீ, கண்ணமங்களம் பகுதியில் 23 செ.மீ, போளுர் 28 செ.மீ, வந்தவாசி, செய்யார் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலுமே பலத்த மழை. தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது. ஜுலை 26ம் தேதி காலை 6 மணிக்கும் மழை பெய்துகொண்டு இருந்தது. மழையால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்படும் என பெற்றோர்கள் எதிர்பார்த்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பலரும் தொடர்புகொண்டு கேட்டனர். ஆனால் அந்தத் தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை.  


காலை 6.30 மணிக்கே தனியார் பள்ளிகளின் பேருந்துகள் மாணவ,மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொட்டும் மழையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இறக்கிவிட்டனர். முக்கிய அதிகாரிகள் மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துக்கொண்டும், ஜெர்கின் அணிந்துகொண்டும் நின்றிருந்தனர். மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி நின்றிருந்தனர்.


ஒலியம்பியாட் ஜோதி பேரணி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் முன்னிலையில் காலை 7.30 மணிக்கு தாலுக்கா அலுவலகத்தின் முன்பிருந்து துவங்கியது. நகரத்தின் முக்கிய வீதிகளில் பேரணி செல்ல அனைவரும் பின் தொடர்ந்தனர். முக்கிய வீதிகளில் பேரணி நடைபெற்றதால் நகரத்தின் போக்குவரத்து அனைத்தும் மாற்றிவிடப்பட்டது. போக்குவரத்து மாற்றப்பட்டது தெரியாமல் கொட்டும் மழையில் பள்ளிக்கு பிள்ளைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற பெற்றோர்கள் தவித்துப்போய்விட்டனர். தொப்பலாக மழையில் நனைந்தபடி தங்கள் பிள்ளைகளை பள்ளியில் கொண்டு சென்றுவிட்டார்கள்.


பேரணியில் கலந்துகொண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவ,மாணவிகள் மழையில் தொப்பலாக நனைந்ததால் குளிரில் நடுங்கியபடி இருந்தனர். பேரணியில் கலந்துகொண்டபின், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒருமணி நேரம் மழை தூரலில் நனைந்தபடி அங்கு நின்றிருந்தனர். அது முடிந்ததும் மாணவர்களை அப்படியே பள்ளிக்கு அழைத்து சென்றார்கள் ஆசிரியர்கள். இப்படி நடந்துகொண்டது பொதுமக்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியது.


இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வேறு நிகழ்ச்சி என்றால் ஒத்திவைத்திருக்கலாம், நாளை மறுநாள் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதை ஒத்திவைக்க முடியாது என்பதால் இப்போதே நடத்தவேண்டிய கட்டாயம் என்றார்.


மழை என்பதால் மாணவ, மாணவிகள் இல்லாத வகையில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியிருக்கலாம் அல்லது சிம்பளாக நடத்தி முடித்திருக்கலாம். ஆனால் கொட்டும் மழையில் மாணவ.மாணவிகளை 3 மணி நேரம் நனையவைத்தது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மாவட்டத்தின் பெற்றோர்களையும் கோபத்துக்கு ஆளாகும் வகையிலேயே அதிகாரிகள், ஆட்சியாளர்கள் செயல்பட்டுள்ளார்களே என பலரும் அதிருப்தியடைந்துள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.