தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர் ஊர் ஊராகச் சென்று கோவில்களில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான், கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த பூல் பாண்டியன், திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில்களில் யாசகம் எடுத்ததில் 10,000 ரூபாய் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற பூல் பாண்டியன் தான் யாசகம் எடுத்து சேர்த்து வைத்திருந்த 10,000 ரூபாயை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் நேரில் வழங்கினார்.
முன்னதாக, இவர் யாசகம் எடுத்து தான் சேமித்து வைத்திருந்த ரூபாய் 7 லட்சத்தை கரோனா நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.