Skip to main content

வெளியே பகட்டாக சுற்றித்திரிந்த முதியவர் மர்மமான முறையில் மரணம்!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

An old man passed away

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் திருவிக நகரைச் சேர்ந்தவர் 65 வயது சேகர். இவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இவர் அங்கீகாரம் பெற்ற பத்திர விற்பனையாளராக இருந்துவந்துள்ளார். தற்போது வயது மூப்பின் காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு உடன்பிறந்தவர்கள் தம்பி ஒருவர், இரண்டு சகோதரிகள். இவர்களுக்குத் திருமணமாகி வெளியூரில் வசித்துவருகின்றனர். இவரது தாய், தந்தையர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்கள். அதனால் சேகர் மட்டும் தனியாக வீட்டில் வசித்துவந்துள்ளார். இவருக்கு சமீப காலமாக திருநங்கைகளுடன் நெருக்கமான பழக்கம் இருந்துவந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

மேலும், இவர் சம்பாதித்த பணத்தில் 30 சவரன் நகை மற்றும் கையில் மோதிரங்களை அணிந்துகொண்டு பகட்டாக வெளியே சென்றுவருவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று (28.11.2021) மாலை 3 மணியளவில் சேகருக்கு அவ்வப்போது உதவியாக இருந்துவந்த அம்மையகரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சேகருக்கு மதியம் சாப்பாடு வாங்கித் தருவதற்காக சேகர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது சேகரின் கால்கள் கட்டப்பட்டு வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த நகைகள் ஏதும் இல்லை, வீட்டில் பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

 

இதுகுறித்த தகவலை வெங்கடேசன் சின்னசேலம் போலீசாருக்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். உடனடியாக தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். நகைக்காக சேகர் கொலை செய்யப்பட்டாரா? இந்தக் கொலை எப்படி நடந்தது என்பது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சின்னசேலம் நகரில் பட்டப்பகலில், கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.