திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மேல்பகுதியில் 75- வது சுதந்திர தின விழாவையொட்டி, ஜி.டி. என். கல்வி குழுமம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இல்லந்தோறும் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூவர்ண தேசியக் கொடி வண்ணத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ராட்சச பலூனை பறக்கவிட ஏற்பாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், ஜி.டி.என்.கல்வி குழும தலைவர் ரத்தினம், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாநகராட்சி மேயர் இளமதி, மாநகராட்சி துணை மேயர் ராஜாப்பா மற்றும் ஜி.டி.என். கல்லூரி இயக்குநர் துரை, திண்டுக்கல் மாமன்ற உறுப்பினருமான வெங்கடேஷ், கல்லூரி முதல்வர் பாலகுருசாமி ஆகியோர் கலந்துகொண்டு தேசிய கோடி வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ராட்சச பலூனை பறக்கவிட்டனர்.
அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள சுமார் 40 ஆயிரம் வீடுகள், 21 பேரூராட்சிகளில் உள்ள சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 710 வீடுகள், பழனி நகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 775 வீடுகள், கொடைக்கானல் நகராட்சி பகுதியில் உள்ள சுமார் 12 ஆயிரம் வீடுகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் உள்ள 12 ஆயிரம் வீடுகள் மற்றும் 14 ஊராட்சிகளில் 306 ஊராட்சிகளில் 3,083 குக்கிராமங்களில் உள்ள சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 433 வீடுகள் என மொத்தம் சுமார் 5 லட்சத்து 93 ஆயிரத்து 22 வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் மத்திய அரசு வழிகாட்டு விதிமுறைகளின்படி, தேசியக் கொடியினை பறக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
அதன் அடிப்படையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மேல் பகுதியில் மூவர்ண தேசியக் கொடி வண்ணத்தில் ராட்சச பலூன் பறக்க விடப்பட்டு, பொதுமக்கள் ஆர்வமாகப் பார்த்து ரசித்து சென்று வருகிறார்கள்