புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், வாக்கு எண்ணும் மையங்களில் இணைய வசதி செய்யும் பணி தொடங்க உள்ளதாக அறிகிறோம்.
இணையப் பயன்பாடு உள்ளே வரும்போது பல்வேறு சந்தேகங்களும் எழுகிறது. அதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் இணைய வசதி செய்ய வேண்டும். மேலும் இணைய இணைப்பு கொடுப்பவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்ட அடையாள அட்டை வழங்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கையுறை, சானிடைசர் போன்றவற்றை வழங்க வேண்டும்.
மேலும் ஒரு சுற்றுக்கு 10 மேஜைகள் என்பதால் காலதாமதம் ஏற்படவும் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளதால் ஒரு சுற்றுக்கு 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தங்கள் மனுவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புகிறேன் என்றார். இந்த நிகழ்வில் திமுக வடக்கு மாசெ (பொ) செல்லப்பாண்டியன், திமுக வேட்பாளர்கள் திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன், புதுக்கோட்டை முத்துராஜா, கந்தர்வகோட்டை சிபிஎம் சின்னத்துரை ஆகியோர் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்தே இம்மனுவை கொடுத்தனர்.