அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகள் வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவர் மீது விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், கூடுதல் மற்றும் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிக்கையை, சிபிசிஐடி சார்பில் துணைக் காவல் கண்காணிப்பாளர் கருப்பையா இன்று தாக்கல் செய்தார். கடந்த ஜூலை 13-ஆம் தேதி, 1160 பக்கங்கள் கொண்ட முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது நாம் அறிந்ததே.
குற்றப்பத்திரிக்கையில் மூவர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சாரத் தடுப்புச் சட்டம், தொழில்நுட்ப முறைகேடு தடுப்புப் பிரிவு உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் நான்கு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் நிர்மலாதேவியின் குரல் மாதிரி சோதனை அறிக்கையும், செல்போன் பேச்சு உள்ளிட்ட விசாரணை ஆவணங்களும் குற்றப்பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டு, குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி, மார்ச் 6-ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிர்மலாதேவி வழக்கில் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிக்கை!
சார்ந்த செய்திகள்
Next Story
நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Next Story
ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள். அப்போது, அடுத்த மாதம் 4 -ஆம் தேதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி காஞ்சனா, அன்றைய தினம் மூன்று மாணவிகளிடம் சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.