Skip to main content

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்! ஆசிட் குடித்த குழந்தை!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018
kri

 

ஆரம்ப சுகாதார நிலையம் என்பது கிராமப்புறங்களில் 24 மணி நேரமும் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கக்கூடிய ஒரு அடிப்படை மருத்துவ நிலையம் ஆகும்.  1978-ல்  உலக சுகாதார அமைப்பு நிறைவேற்றிய  ‘அல்மா அடா’ அறிக்கையின்படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.  நல்ல நோக்கத்துடன் உலகளவில் செயல்பட்டுவரும் இத்திட்டத்தின் கீழ்,  தமிழகம் முழுவதும்  ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centre) செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், ‘மூடியே கிடக்கின்றன.. டாக்டர்கள் வருவதில்லை.. தரமான மருத்துவம் இல்லை’ என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக உள்ளன. 

 

விருதுநகர் மாவட்டம் – கன்னிசேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடந்திருப்பதைப் பார்ப்போம். 

 

விருதுநகர் அருகில் உள்ள சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கப்பாண்டி. இவருடைய மனைவி சுகந்தி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.  இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கர்ப்பிணி என்பதால், தன் 2-வது மகள் கிரிஷ்மாவை (4 வயது) அழைத்துக்கொண்டு, கன்னிசேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றார். பரிசோதனையை முடித்த கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கு உணவு வழங்கப்பட்டது.  உணவு அருந்தியவுடன், கிரிஷ்மாவுக்கு தாகம் ஏற்பட்டிருக்கிறது. உடனே, அங்கு குடிநீர் பாட்டிலில் நிரப்பப்பட்டிருந்த ஆசிட்டை, குடிநீர் என்று நினைத்துக் குடித்துவிட்டாள்.  ரத்த வாந்தி எடுக்கத் தொடங்கியதும், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டாள் கிரிஷ்மா. தற்போது, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறாள். 

 

மக்கள்  வந்து செல்லும் மருத்துவ நிலையத்தில்,  பாதுகாப்பற்ற முறையில், அதுவும் பொது இடத்தில் குடிநீர் பாட்டிலில் ஆசிட்டை நிரப்பி வைத்திருக்கின்றனர். இந்த அலட்சியமானது,  ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்குக் கிடைத்துவரும்  மருத்துவ சேவையின் தரத்தைக் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

Next Story

‘3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
'Chance of rain in 3 districts' - Meteorological Department information

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், தூத்துக்குடியின் மாநகர பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பெய்யும் பருவம் தவறிய மழையால் தூத்துக்குடியில் உப்பள தொழில்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.