Skip to main content

கே.எஸ்.அழகிரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மக்கள் கட்சி புகார்...

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

National People's Party complains to take action against KS Alagiri ...

 

உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை விமர்சித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல் ரவி, சென்னை  உயர்நீதிமன்ற பதிவுத்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

 

கடந்த அக்டோபர் 1 ம் தேதி மறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இதனால் அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து  நெரிசலில் சிக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிமன்றத்திற்கு வர 25 நிமிடம் காலதாமதமானது.

 

பொது ஊழியரான தன்னை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, தனது பணி பாதிக்கப்பட்டதால் அது குறித்து உள்துறை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க  உத்தரவிட்டிருந்தார்

 

அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறை செயலாளர் பிரபாகர் ஆஜராகி வருத்தம் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என உத்தரவாதம் அளித்ததை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை  நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

இதை விமர்சித்து,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்ட அறிக்கையில், அசாதாரண சூழலில் ஏற்பட்ட எதிர்பாரா நிகழ்வை இயல்பாக எடுத்துக்கொள்ளாமல் பொங்கி எழுந்துள்ளதாகவும், உள்துறை செயலாளரை வசை பாடியது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்திருந்தார்.

 

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்குவதை நீதிபதி புரிந்து கொண்டாரா என்றும், நீதிபதி தன்னுடைய வரம்பை மீறிப்  பேசியது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

கே.எஸ்.அழகிரியின் அறிக்கை நீதிமன்ற அவமதிப்பு எனவும், நீதிபதி மீது அவதூறு பரப்பும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செயல்பட்டுள்ள அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரி தேசிய மக்கள் கட்சித் தலைவரும்,வழக்கறிஞருமான எம்.எல் ரவி உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியிருந்தார்.

 

இந்த நிலையில், இன்று  தலைமை நீதிபதி அமர்வில், எம்.எல். ரவி சார்பில் பதிவுத்துறைக்கு அனுப்பிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறையிட்டார். இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.