Skip to main content

எமெர்ஜென்சி வார்டில் இருந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு! - நோயாளிகள் சிதறி ஓட்டம்!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

 


தேர்தல் விரோதம் காரணமாக இரு கோஷ்டியினர் மோதிக்கொண்டதில், 5 பேர் அரிவாள் வெட்டுக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 100- க்கும் மேற்பட்டோர் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். நேற்று (06/04/2021) நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது இரு கட்சி இளைஞர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அதனைத் தடுத்து நிறுத்தி இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். நேற்று ஏற்பட்ட விரோதம் பகையாக மூண்டு இன்று அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சியினரிடையே மீண்டும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

 

நாகை ஏழைப்பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்ற இந்த கோஷ்டி மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களும் கத்தி அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த மாரியப்பன், நகுலன், குகன், நித்தியானந்தம், நாகேந்திரன் ஆகிய இளைஞர்களுக்கு தலை, கை, காது, உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் 5 பேரும் நாகை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

காயமடைந்தவர்களைப் பார்க்க வந்த உறவினர்களை மற்றொரு தரப்பினர் நாகை அரசு மருத்துவமனை எமர்ஜென்சி வார்டு உள்ளே புகுந்து அரிவாளால் வெட்டினர். அப்போது அங்கிருந்த நோயாளிகளும், பொதுமக்களும் அலறி அடித்து நாலாபுறமும் அச்சத்தில் சிதறி ஓடினர்.

 

இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் செல்ஃபோனில் பதிவு செய்தனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அரசு மருத்துவமனை மற்றும் ஆரியநாட்டுத்தெரு, மகாலட்சுமிநகர் ஆகிய கிராமங்களில் அதிரடிப்படை காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

பொதுமக்கள் மத்தியில் அரிவாளால் வெட்டி மோதிக் கொண்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும், ஆரியநாட்டுத்தெரு மற்றும் மகாலட்சுமிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடி வருகின்றனர் காவல்துறையினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.