Skip to main content

நான் பெற்ற குட்டிகள் எங்கே...? தேடி வந்து எடுத்துச் சென்ற தாய் சிறுத்தை...ஒரு நெகிழ்ச்சி சம்பவம்...

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனத்தையொட்டியுள்ள கிராமம் தொட்டமுதுகரை. இந்த கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ். இவரது  தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அதில் சென்ற ஒருவாரகாலமாக கரும்புகளை வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று காலை கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கரும்பு பயிரில் உள்ள தோகைகளுக்கு நடுவே இரண்டு சிறுத்தை குட்டிகள் ஒன்றோடொன்று விளையாடிக்கொண்டிருந்தது. பார்க்க பூனைக்குட்டி போல் இருந்தது.

 

mother cheetah search for babies

 

 

கரும்பு தொழிலாளர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விவசாயி தங்கராஜ் உடனடியாக அருகே உள்ள  ஜூரஹள்ளி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சிறுத்தை குட்டிகள் இருந்த இடத்திற்கு வந்த வனச்சரகர் காண்டீபன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் கரும்பு தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டிகளை மீட்டனர். பூனை கூட்டி அன்பாக விளையாடுவது போல் இவைகளும் விளையாடியது. தாய் சிறுத்தை எங்காவது பதுங்கியிருக்கிறதா என்பதை அப்பகுதி முழுக்க தேடினார்கள். தாய் சிறுத்தை இருப்பிடத்தை அறிய முடியவில்லை. பிறகு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு என்ன செய்வது என்று தகவல் கேட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறை உயர் அதிகாரிகள் அந்த இடத்தில் கண்கானிப்பு கேமராவையுங்கள் உறுதியாக தாய் சிறுத்தை வர வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.  கரும்பு வெட்டும் பணியை நிறுத்துமாறு கூறிவிட்டு அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தினார்கள் பிறகு வனத்துறை ஊழியர்கள் தங்களுக்கு பாதுபாப்பு கருவிகளோடு அந்த சிறுத்தை குட்டிகளை அதே கரும்பு தோட்டத்தில் விட்டு மதியம் முதல்  இரவு வரை காத்திருந்தனர் கரும்பு தோட்டத்தில் சிறுத்தைகுட்டிகள் இருந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாமல் தடுத்தனர்.

அப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் இயங்க தொடங்கியது. இரவு 7.58 மணியளவில் ஒரு பெரிய சிறுத்தை பவ்வியமாக மெல்ல மெல்ல முன்னோக்கி வந்தது. அதுதான் தாய் சிறுத்தை. கரும்பு தோட்டத்தில் தனது குட்டிகளை விட்ட இடத்தில் தேடியது. குட்டிகள் இடம் மாறி இருந்தது.  கண்களில் கோபம் கொப்பளிக்க தான் ஈன்ற குட்டிகளுக்கு என்ன நடந்ததோ என்ற அபாய ஏக்கத்தில் உஷ்...உஷ்... என்ற பெருமூச்சுடன் ஒரு விதமான (அதாவது தாய் பூனை குட்டிகளை அழைப்பது போல்) சத்தமிட்டது. தாயின் அழைப்பை கேட்ட சிறுத்தை குட்டிகள் கரும்புக் காட்டுக்குள் மேலும் கீழும் குதித்தது. தாய் சிறுத்தை குட்டிகளை கண்டு விட்டது. தாய் பாசத்துடன் அங்கு வந்த தாய் சிறுத்தை குட்டிகளின் முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியதோடு பசியால் இருந்த தனது குட்டிகளுக்கு பாலூட்ட தொடங்கியது. இரு குட்டிகளும் பசியாறிய பிறகு மேலெழுந்து நின்று சுற்றுப் புறம் முழுக்க பார்வையால் அளந்தது. அதன் பிறகு தனது இரு குட்டிகளையும் வாயில் கவ்வி தூக்கிக் கொண்டு வனப்பகுதிக்கு சென்றது.

நமது குடியுரிமை காடு தான், நாடு அல்ல என்பதை தனது இரு குட்டிகளோடும் சொல்லாமல் சொல்லிச் சென்றது தாய் சிறுத்தை.

இது ஒருபுறம் இருக்க நாங்கள் வாழும் பகுதியில் நீங்கள் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்பது போல்
அப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட வாய்ப்புள்ளதால் இரவில் யாரும் நடமாட வேண்டாம் என வனத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.